இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவைப் பார்த்து காப்பியடிக்கக் கூடாது: பொன்முடி

posted in: கல்வி | 0

ponmudiவேலூர்,​​ பிப்.​ 22: இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவையோ,​​ பிற நாடுகளையோ பார்த்துக் காப்பியடிக்கக் கூடாது;​ அது,​​ நமது தேவைக்கு ஏற்றாற்போல இருக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழா பாகாயம் சி.எம்.சி.​ மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.​ தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை வகித்தார்.​ இளங்கலை,​​ முதுகலை,​​ ஆராய்ச்சி,எம்.பில்.​ படிப்புகளை ​ முடித்த 18,122 பேருக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசியது:​ உயர்கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் தமிழில் இடம்பெற வேண்டும்.​ குறிப்பாக,​​ பொறியியல் கல்வி தமிழில் வர வேண்டும்.​ தொடக்கக் கல்வி முதலே ஆங்கிலப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.​ ​

மாணவர்களின் தொடக்கக் கல்வித் திட்டத்தில் மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் உயர்கல்வியில் முன்னேற்றம் காணமுடியும் என்பதால்,​​ செயல்வழிக் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டது.​ ஏழை முதல் பணக்காரர்கள் வரை உள்ள அனைத்து குழந்தைகளும் ஒரே கல்வியைப் பயில வேண்டும் என்பதால் சமச்சீர் கல்வி முறை அறிவிக்கப்பட்டது.​ ​

கிராமப்புற மாணவர்களையும்,​​ மேல்தட்டு மக்களையும் இணைக்கும் வகையிலான கல்வி முறை இருந்தாலே,​​ ஏற்றத்தாழ்வுகள் அற்ற,​​ பொருளாதாரத் தாழ்வு அற்ற சமுதாயம் உருவாகும்.​ ஆனால்,​​ இவற்றுக்கும் எதிர்ப்பு கிளம்புகிறது.​ ​

இந்திய கல்விக் கொள்கைக்கு,​​ அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைப் பார்த்து காப்பியடிக்கக் கூடாது.​ நம் நாட்டில்,​​ நாம் படித்தவற்றில் என்ன மாறுதல்கள் தேவை என்பதைப் பார்த்து,​​ கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்.​ மத்திய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.​ தமிழகம் மாநிலப் பட்டியலிலேயே நீடிக்கும் என முதல்வரும் அறிவித்துள்ளார் என்றார் பொன்முடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *