வேலூர், பிப். 22: இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவையோ, பிற நாடுகளையோ பார்த்துக் காப்பியடிக்கக் கூடாது; அது, நமது தேவைக்கு ஏற்றாற்போல இருக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழா பாகாயம் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை வகித்தார். இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி,எம்.பில். படிப்புகளை முடித்த 18,122 பேருக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசியது: உயர்கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் தமிழில் இடம்பெற வேண்டும். குறிப்பாக, பொறியியல் கல்வி தமிழில் வர வேண்டும். தொடக்கக் கல்வி முதலே ஆங்கிலப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
மாணவர்களின் தொடக்கக் கல்வித் திட்டத்தில் மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் உயர்கல்வியில் முன்னேற்றம் காணமுடியும் என்பதால், செயல்வழிக் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஏழை முதல் பணக்காரர்கள் வரை உள்ள அனைத்து குழந்தைகளும் ஒரே கல்வியைப் பயில வேண்டும் என்பதால் சமச்சீர் கல்வி முறை அறிவிக்கப்பட்டது.
கிராமப்புற மாணவர்களையும், மேல்தட்டு மக்களையும் இணைக்கும் வகையிலான கல்வி முறை இருந்தாலே, ஏற்றத்தாழ்வுகள் அற்ற, பொருளாதாரத் தாழ்வு அற்ற சமுதாயம் உருவாகும். ஆனால், இவற்றுக்கும் எதிர்ப்பு கிளம்புகிறது.
இந்திய கல்விக் கொள்கைக்கு, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைப் பார்த்து காப்பியடிக்கக் கூடாது. நம் நாட்டில், நாம் படித்தவற்றில் என்ன மாறுதல்கள் தேவை என்பதைப் பார்த்து, கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். மத்திய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் மாநிலப் பட்டியலிலேயே நீடிக்கும் என முதல்வரும் அறிவித்துள்ளார் என்றார் பொன்முடி.
Leave a Reply