சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை துவக்க இந்தாண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இத்தகவலை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு(ஏ.ஐ.சி.டி.இ.,) வந்துள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் தென் மண்டலத் தலைவருமான மன்னர் ஜவகர் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பொறியியல் படிப்பிற்கான இடங்கள் உள்ளன. சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘கடந்த ஆண்டில் மட்டும் 51 ஆயிரத்திற்கும் அதிமான பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்’ என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:
தற்போது நிறைய கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை துவக்க காத்திருக்கின்றன. பொறியியல் கல்லூரிகளை துவங்க அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளதால், ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் பிப். 20ம் தேதியிலிருந்து, பிப். 28ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப தேதி முடிய இன்னும் நாட்கள் இருப்பதால், விண்ணப்பிக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் துவங்க வசதியாக கல்லூரிகளின் தரம் மற்றும் வசதிகள், குழுக்கள் மூலம் ஆராயப்பட்டு, எல்லாம் சரியாக உள்ள கல்லூரிகளுக்கு வரும் ஏப்ரல் இறுதியில் அனுமதி அளிக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு கேட்கும் கல்லூரிகளுக்கு, வரும் மார்ச் மாதத்தில் பல்கலைக்கழகத்தின் சார்பில் குழு அனுப்பப்பட்டு ஆராய்ந்த பின், பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கப்படும். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.
Leave a Reply