இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம்! – பிரிட்டிஷ் பிரதமர்

posted in: உலகம் | 0

25-gordon-brown200லண்டன்: தமிழ் மக்களின் மீள் குடியேற்ற விஷயத்தில் இலங்கை [^] அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது. இது தொடர்ந்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரௌன் தன்னைச் சந்தித்த உலகத் தமிழ் பேரவையினரிடம் உறுதி தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று (24.02.2010) புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் ‘தமிழீழ விடுதலை நோக்கிய பயண’ நிகழ்வு ஆரம்பமானது.

தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபான்ட் தொடக்கி வைத்துப் பேசினார்.

தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு, ஓர் அணியில் செயல்பட வேண்டும் என்றும், இன்றைய சூழலில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்து வைக்க வேண்டும் என்றும் மிலிபாண்ட் வலியுறுத்தினார்.

பிரிட்டிஷ் பிரதமருடன்…

பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனையும் சந்தித்தனர் உலகத் தமிழ் பேரவை பிரதிநிதிகள்.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்ற சந்திப்பில், உலகத் தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள மக்களை விடுவித்தல், போர்க்குற்ற விசாரணைக்கான செயற்பாடுகள், மற்றும் மக்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்கள், நோக்கங்கள் பற்றியும் விவரமாக எடுத்துரைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர், “இலங்கை அரசுக்குக்கான தமது அழுத்தம் தொடர்ந்து வருவதாகவும், அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றபோதுகூட அரசின் ஐனநாயக விரோதப்போக்கைக் கண்டித்து” கடிதம் எழுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் மீள் குடியேற்ற விஷயத்தில் இலங்கை அரசு தொடர்ந்து இதே அலட்சியத் தன்மையைக் கடைப்பிடித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் எனவும் பிரவுன் கூறினார்.

காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தவிடாது தடுத்து, ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கு தான் ஏற்பாடு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரிட்டிஷ் பிரதமர், தமது அரசு முடிந்தளவு மேலும் பல அழுத்தங்களை இலங்கை அரசுக்குக் கொடுக்கும் எனக் கூறினார்.

தமிழ் மக்களின் விருப்பு பற்றி தமிழீழத்தில் கருத்துக் கணிப்பு நடத்துவது பற்றி உலகத் தமிழர் பேரவையின் அங்கத்தவர்கள் சுட்டிக்காட்டியபோது, அதனை தமது அரசு மட்டும் தனித்து செய்துவிட முடியாது எனவும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தே இதற்கான செயற்பாடுகளில் இறங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

உலகத் தமிழர் பேரவையின் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பொன்சேகா கைது விவகாரத்தில் அமெரிக்க – பிரிட்டனின் கூட்டு கண்டத்தைப் பார்த்து மிரண்டு போய் உளறிக் கொட்டிய இலங்கைக்கு, உலகத் தமிழர் பேரவையினரின் சந்திப்பு பெரும் எரிச்சலைக் கொடுத்துள்ளது.

உலகத் தமிழர் பேரவை…

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து தாம் ஓர் அணியில் திரள வேண்டும் என்று தீர்மானித்து ஆகஸ்ட் 2009 ல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் உருவாக்கப்பட்டது உலகத் தமிழர் பேரவை.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், நார்வே, சுவீடன், ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிஸ், இத்தாலி, மொரீஷியஸ், மலேசியா, ஆஸ்ஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 15 நாடுகளின் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உலகத்தமிழர் பேரவையை உருவாக்கியுள்ளனர்.

இந்த அமைப்பின் முதல் வேலைத் திட்டம், இலங்கைக்கெதிரான பொருளாதாரத் தடையை உருவாக்குவதோடு அதன் அடிப்படையில் இலங்கைக்கெதிரான வரிச்சலுகைகளை நிறுத்தக்கோரி அரசியல் மட்டங்களில் அழுத்தங்களைக் கொடுப்பதே.

அத்துடன் தமிழீழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உறுப்புக்களை இழந்தோருக்கும் உதவவும், பெற்றோர், உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவும், தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு உதவவும் நாட்டில் உள்ள மனிதநேய அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்திட்டங்களை உருவாக்கும் முயற்சிகளை பல தடைகளையும் மீறி செய்து வருகிறது இந்த அமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *