என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் த.கூட்டமைப்பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது: அ.விநாயகமூர்த்தி

posted in: உலகம் | 0

a_vinaayagamurthyதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப்பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார்.

என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் கூட்டமைப்பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது. இவ்வாறு த.கூட்டமைப்பு வேட்பாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்றத் தேர்தலின் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி யாழ்.செயலகத்தில் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ்தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுயேச்சைக் குழுக்களுக்கு தலா 15 லட்சம் ரூபாவைக் கொடுத்து தேர்தலில் போட்டியிடுமாறு தூண்டிவிட்டுள்ளார்.

ஆனால் எந்தவொரு சதித்திட்டங்களினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைத்துவிட முடியாது.

சலுகைகளை வழங்கி தமிழ் மக்களை விலை மாந்தர்களாக்க நினைக்கிறார் ஜனாதிபதி; அவருடைய நினைப்பு ஒருபோதும் நடைபெறாது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்று தமிழ்த் தேசியத்தை சர்வதேசம் எங்கும் பறைசாற்றுவோம்.

எமது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு நிற்கிறார்.

அவரை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைப்பதற்கான முயற்களில் ஈடுபட்டு வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *