ஒரு ஆசிரியர்; 102 மாணவர்கள் : எப்படி முன்னேறும் விழுப்புரம்

posted in: மற்றவை | 0

தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த சாத்தனூர் தொடக்கப் பள்ளியில் 102 மாணவர்களுக்கு ஓராண்டாக, ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சாத்தனூர் தொடக்கப்பள்ளியில், 102 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பணியிடங்கள் உள்ளன. இவர்களில், தலைமை ஆசிரியர் ரோஸ்விக்டோரியா மட்டுமே கடந்த ஓராண்டாக பணியில் உள்ளார். இவருடன் பணியாற்றிய சகாயமனோ என்பவர் உடல்நிலை சரியில்லை என்று கூறி, கடந்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் கடந்த டிச.,31ம் தேதி வரை, ஊதியமில்லா விடுப்பு எடுத்து சென்றார். இவர், அனுமதி கோரிய விடுப்பு காலம் முடிந்ததும், மேலும் 10 மாதங்கள் விடுமுறை வேண்டி ஏ.இ.ஓ., விற்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளார். இவரது பணி இடத்திற்கு கடந்த ஓராண்டாக வேறு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. மற்றொரு காலியிடத்திற்கு பலமுறை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டும் போக்குவரத்து வசதியில்லாததால், யாரும் பணிபுரிய முன்வரவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், தென் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டும் அவர் இதுவரை பணியில் சேரவில்லை. இப்பள்ளியில் பணிபுரிய ஆசியர்கள் யாரும் ஆர்வம் காட்டாததால் கடந்த ஓராண்டாக தலைமை ஆசிரியர் ரோஸ் விக்டோரியா மட்டும் 102 மாணவர்களுக்கும் பாடம் நடத்தி வருகிறார். உடல்நிலை சரியில்லை என்றால் கூட, மாற்று ஆசிரியர் இல்லாததால் அவரால் விடுப்பு எடுக்க முடிவதில்லை. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் முறையாக பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பட்டதாரி ஒருவர் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் ஏற்கனவே கல்வியில் பின்தங்கியுள்ளது. ஆரம்ப கல்வி கற்க ஆசிரியர் இல்லை என்றால் கிராமப்புற மாணவர்கள் எப்படி உயர் கல்விக்கு செல்ல முடியும். கல்வித்துறை இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *