சென்னை:””ஐந்தாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கக்கூடிய அக்னி 5 ஏவுகணை ஒரு வருட காலத்தில் சோதனை செய்யப்படும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நேற்று மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்று பேசியதாவது:மாணவியராகிய நீங்கள் தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் வெளிவர வேண்டும். உங்களில் பலர் அரசியல்வாதிகளாக விரும்புகிறீர்கள். லஞ்சம் வாங்காத அரசியல்வாதிகளாக வர வேண்டும்.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, “பறவை விமானத்திற்கு சமமானது’ என ஒரு ஆசிரியர் பாடம் எடுத்ததே, அறிவியலில் எனக்கு ஆர்வம் ஏற்பட காரணமாய் இருந்தது. இப்படி ஆசிரியர்கள் ஊக்குவித்த போதும், பெற்றோரும் மாணவியரை ஊக்குவிக்க வேண்டும். நம் நாட்டில் பெண்களில் சிறந்து விளங்குகின்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வரிசையில் நீங்களும் முன்னேறி வர வேண்டும்.சமீபத்தில் அக்னி 3 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு வருடத்தில், ஐந்தாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கக்கூடிய அக்னி 5 ஏவுகணை சோதனை செய்யப்படும்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
Leave a Reply