புது தில்லி, பிப்.10: கல்வியை பணம் கொழிக்கும் தொழிலாகக் கருதி கொள்ளை லாபம் அடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
கல்வி என்பது லாப நோக்கம் இல்லாத ஒரு புனிதமான பணி. வேறெந்த தொழிலில் லாபம் எதிர்பார்க்கும் வர்த்தகர்கள், கல்விப் பணியில் லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். அமைச்சராக தான் இருக்கும் வரையில் இவ்விதம் லாபம் சம்பாதிப்பதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதிபட தெரிவித்தார்.
தில்லியில் இந்திய தொழில்வர்த்தக சபை சம்மேளனங்களின் மகளிர் கூட்டமைப்பு (ஃபிக்கி) “மாறிவரும் இந்திய கல்விச் சூழல்’ என்ற கருத்தரங்கின் கலந்துரையாடலில் கபில் சிபல் கூறியது:
கல்வி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக் கூடாது என்று கூற மாட்டேன். அவ்விதம் சம்பாதிக்கும் லாபத்தை மீண்டும் கல்விப் பணியிலேயே செலவிட வேண்டும். கல்வி மேம்பாட்டுக்கு அது பயன்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்விக்காக, கல்வி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடலாம் என்பதற்கு அனுமதிக்க முடியாது. கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் வருவாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் டிவிடெண்ட் அளிப்பதை ஏற்க முடியாது.
கல்வியை லாபம் தரும் தொழிலாக அரசு அறிவிக்காததன் காரணம் இப்போதாவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த உலகில் எந்த ஒரு நாடும் கல்வி மூலம் லாபம் ஈட்டுவதை அனுமதித்ததாகத் தெரியவில்லை. ஹார்வர்ட் பல்கலைக் கழகம், யேல் பல்கலைக் கழகம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் ஆகியன அனைத்துமே அறக்கட்டளையாகும். ஸ்டான்ஃபோர்ட் பிரபலமானதற்குக் காரணமே அவரது தயாள குணம்தான். அவர் தொழிலதிபராக அறியப்படவில்லை. கல்வியாளராகத்தான் பிரபலமானார்.
எதிர்வரும் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட சிபல், அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால் ஒதுக்கீடுகளும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்காது என்றும் கூறினார்.
கல்வி முதலீடு என்பது, அறிவுசார் சொத்தாகும். நாட்டில் பள்ளிகளில் சேரும் குழந்தைகளில் 88 சதவீதம் பேர் கல்லூரிப் படிப்பை எட்டுவதில்லை.
ஆராய்ச்சி மற்றும் முன்னோடி கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் பல்கலைக் கழகங்களை அங்கீகரிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கல்வி நிறுவனங்களை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. அதற்கு உரிய கட்டமைப்பு மற்றும் சாதமான சூழலை ஏற்படுத்திய பிறகே அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள பயிற்றுவிப்பு முறை மற்றும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.
செமஸ்டர் தேர்வு முறைக்கு பல பல்கலைக் கழகங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேட்டதற்கு, மாற்றங்கள் கொண்டு வரப்படும்போது இதுபோன்ற எதிர்ப்புகள் கிளம்புவது சகஜமானது என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே உள்ள அரசு பள்ளிக் கட்டடங்களை தனியார் துறையினர் தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வதற்காக கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது என்று கபில் சிபல் கூறினார்
Leave a Reply