சென்னை: “”எண்ணூர் – மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மதுரவாயல் மேம்பால விரைவுச் சாலை திட்டங்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் எண்ணூர் – மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மதுரவாயல் உயர்மட்ட மேம்பால விரைவுச் சாலை திட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் சாமிநாதன், மத்திய கப்பல் துறைச் செயலர் மோகன்தாஸ், தமிழக நெடுஞ்சாலைத் துறைச் செயலர் சந்தானம், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களின் தலைவர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், துறைமுக இணைப்பு சாலை பணிகளை விரைவில் முடிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்ததாவது: துறைமுகங்களை இணைப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை வளப்படுத்துவது மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை துரிதமாகக் கையாள்வதற்கான வசதிகளை பெருக்கவே, எண்ணூர் – மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மதுரவாயல் மேம்பால விரைவுச் சாலை திட்டம் இரண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களையும் நடைமுறைப்படுத்த நிலம் கையகப்படுத்துதல், நிவாரணம் வழங்குவது மற்றும் இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களை மறு குடியமர்வு செய்தல், திட்டத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்ட செலவினங்கள் உயர்வு ஆகிய காரணங்களால், தாமதம் ஏற்பட்டுள்ளது. எண்ணூர் – மணலி சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகை 150 கோடி ரூபாய்.
தற்போது இத்திட்டத்துடன் கூடுதலாக திருவொற்றியூர் – பொன்னேரி – பஞ்சட்டி ஆகியவற்றிற்கு நான்கு வழி சேவை சாலை அமைத்தல், எண்ணூர் விரைவுச் சாலையின் கீழ் சாலை வசதி அளித்தல், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு செல்லும் சாலையோரம் வடிகால் வசதி செய்தல், விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் மறுமதிப்பீடு செய்யப்பட்டு 600 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மறுமதிப்பீட்டுச் செலவால், சென்னை துறைமுகத்தின் பங்களிப்பு செலவுக்கு திட்டமிட்ட 38 கோடி ரூபாய் தற்போது 139 கோடியே 80 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயில் வரையில் செல்லும் நான்கு வழி உயர்மட்ட மேம்பாலச் சாலை அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு செலவு 1,655 கோடி ரூபாய். இதில், நிலம் கையகப்படுத்துதல், மறு குடியமர்வு மற்றும் மறு தீர்வு செய்வதற்கான தொகையான 310 கோடி ரூபாயும் அடங்கும்.
இத்தொகையை, சென்னை துறைமுகமும், தமிழக அரசும் சமமான பங்களிப்பாக அளிக்கும். இன்று நடந்த கூட்டு பரிசீலனைக் கூட்டத்தில், இந்த இரு திட்டங்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் ஒருங்கிணைத்து தீர்வு காண விவாதிக்கப்பட்டது. இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கப்பல் துறை அமைச்சகம் தேவையான ஒப்புதல்கள் அளித்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
பாதிக்கப்படும் பொதுமக்களை மறு குடியமர்வு செய்வதற்கான பணிகளில் குறைபாடு ஏற்படாதவாறு, குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேம்பாலப் பணியை மேற்கொள்ள, சுற்றுச்சூழல் துறையின் தடையில்லா சான்றை பெறுவதற்கான முயற்சியில் தமிழக அரசின் முதன்மை செயலர் ஈடுபட்டுள்ளார். இந்த இரண்டு முக்கிய திட்டங்களுக்கான பணிகளும் விரைவில் துவக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு வாசன் தெரிவித்தார்.
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன் கூறும் போது, “”எண்ணூர் – சென்னை துறைமுகங்களின் இணைப்புச் சாலை திட்டத்திற்கு 175 கோடி ரூபாய் தோராய மதிப்பீடாக அளிக்கப்பட்டிருந்தது. இரு வழித்தடமாக அமைக்கவிருந்த இச்சாலை தற்போது நான்கு வழித்தடமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாலும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் தற்போது 600 கோடி ரூபாயாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவை தலா 23.30 சதவீத தொகையையும், தமிழக அரசு 9.70 சதவீதத்தையும், எண்ணூர் துறைமுகம் 5.67 சதவீத தொகையையும் அளிக்கிறது. இதில், தமிழகத்தின் பங்காக 58 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. ஆய்வுக் கூட்டத்தில் தற்போதுள்ள சாலையை சீரமைக்க 12 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
Leave a Reply