தெலுங்கானா ராஜினாமா விவகாரம்:மாஜி எம்.பி.,யிடம் கோர்ட் கேள்வி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:தெலுங்கானா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாக்களை உடனடியாக ஏற்கும்படி, ஆந்திர சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 130 எம்.எல்.ஏ.,க்களில் 129 பேரின் ராஜினாமாவை ஏற்க முடியாது என, சபாநாயகர் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை ஏற்கும் படி, சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, ஆந்திர முன்னாள் எம்.பி., நாராயண ரெட்டி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பன்சால், தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு பின், இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனு தாரரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக,”எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை ஏற்க வலியுறுத்துவதற்கு நீங்கள் (மனுதாரர்) யார்? நீங்கள் தற்போது எம்.எல்.ஏ.,வும் இல்லை, எம்.பி.,யும் இல்லை. இந்நிலையில், ராஜினாமாவை வலியுறுத்துவதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? பொது மனு என்றால் என்ன? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை’ என,கடுமையாக சாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *