புனே : அமெரிக்கப் புலனாய்வு பிரிவின் விசாரணையில் இருக்கும் ஹெட்லி, கோரேகான் ஜெர்மன் பேக்கரிக்கு வந்து அங்குள்ள இடங்களைப் பார்வையிட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வரை உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் சந்தோஷமாகக் கூடி உணவருந்தி களித்த கோரேகான் ஜெர்மன் பேக்கரி இப்போது போலீஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குவிந்துள்ள விசாரணை இடமாக மாறிவிட்டது.
ஜெர்மன் பேக்கரி அருகில் ஓஷோ ஆசிரமம், பக்கத்தில் யூதர்களின் வழிபாட்டு இடம், வெளிநாட்டினர் வாழும் பகுதிகள் ஆகியவை இருக்கின்றன. இந்த இடத்துக்கு, மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லி, ஏற்கனவே வந்து சுற்றிப் பார்த்து அதன் அடிப்படையில் சில தகவல்களைப் பயங்கரவாதிகளுக்குத் தந்திருக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது, ஜெர்மன் பேக்கரி பகுதியில் பாதுகாப்பு போலீசார், பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அருகிலுள்ள மருத்துவமனைகளில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரைக் காண அவர்களின் உறவினர்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலர் அருகிலுள்ள ஐந்து நட்சத்திர “ஓ’ ஓட்டலில் தங்கியிருந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஓட்டலில் தங்கியிருந்தவர்களின் பட்டியல் தயாரித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply