பி.எஸ்.என்.எல்., எஸ்.சி.,எஸ்.டி., ஊழியர் சங்க தேர்தலை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு:சேர்மன் பதிலளிக்க நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

மதுரை:மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பி.எஸ்.என்.எல்., எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் நல சங்க நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி, அதன் சேர்மன் மற்றும் தேசிய ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பி.எஸ்.என்.எல்., எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் நல சங்க நிர்வாகிகள் அருமைராஜ், தனபால்பாண்டியன் தாக்கல் செய்த மனு:சங்க தேர்தல் குறித்து சில பிரச்னைகள் இருந்ததால் தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆணையம் சில அறிவுரைகளை கூறியது. அதன்படி 2010 ஜன., 28 முதல் 30ம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேர்தல் நடந்தது. அதற்காக எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது.

தமிழக தொலைதொடர்பு மற்றும் சென்னை வட்டத்தில் இருந்து 289 பேர், தலா ரூ.400 பிரதிநிதிகள் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டனர். விதிமுறைகளின்படி தேர்தல் நடக்கவில்லை. முதன்மை தொடர்பு அலுவலர் பார்வையாளராக இல்லை. அவருக்கு பதிலாக தேர்தல் அதிகாரியே பார்வையாளராக செயல்பட்டார். தமிழகத்தில் இருந்து சென்றவர்களுக்கு தேர்தலில் ஓட்டு போட அனுமதி வழங்கப்படவில்லை. தேர்தலில் நடந்த தவறு குறித்து பி.எஸ்.என்.எல்., சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை. இத்தேர்தல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் ராஜசேகரன் ஆஜரானார்.நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், இம்மனு குறித்து பதிலளிக்கும்படி பி.எஸ்.என்.எல்., சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர், எஸ்.சி., எஸ்.டி., தேசிய ஆணையம், முதன்மை தொடர்பு அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *