சென்னை : பி.டி.கத்தரிக்காய்க்கு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக்கான ஒப்புதலை, மரபணு பொறியியல் அங்கீகார குழு அளிக்க முடிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தாக்கல் செய்த மனு: டில்லியில் மரபணு பொறியியல் அங்கீகார குழு உள்ளது. சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இக்குழு செயல்படுகிறது. இக்குழுவின் ஒப்புதல் இல்லாமல், மரபணு மாற்றப்பட்ட எந்தப் பொருளையும் தயாரிக்க, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய, விற்க முடியாது. ஒப்புதல் பெற்ற பின்னும், நிபந்தனைகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை குழு கண்காணிக்க வேண்டும். தற்போது, மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக்கான ஒப்புதலை வழங்க இக்குழு முடிவெடுத்துள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கை பெற்ற ஆறு நாட்களில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவசரகதியில் இது எடுக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் பார்கவாவை, சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. பி.டி. கத்தரிக்காயை பயன்படுத்துவதற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மரபணு பொறியியல் ஒப்புதல் குழுவின் பரிந்துரையானது உள்நோக்கம் கொண்டது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் பரிந்துரை உள்ளது. எனவே, மரபணு பொறியியல் அங்கீகார குழுவின் முடிவு செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் அடங்கிய “முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராயினர். மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை “முதல் பெஞ்ச்’ தள்ளிவைத்தது. மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
Leave a Reply