திருச்சி, பிப்.19: தேசிய அளவில் மின்னணு நூலகத்தைப் பயன்படுத்துவதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது என்றார் அதன் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ.
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் தொழில்நுட்பத் துறை, நூலகம், தகவல் அறிவியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்னணு வளங்களால் உயர் கல்வியில் ஏற்படும் பிரச்னைகள், முன்னேற்றங்கள், வாய்ப்புகள், சவால்கள் பற்றிய இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அவர் பேசியது:
“இணையவழி கல்வி என்பது கணினி வளர்ச்சியால் ஏற்பட்டது. தற்போதுள்ள மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் மின்னணு வழியாக தகவல்களைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மின்னணு நூலகத்தில் தகவல்களைப் பெறுவதில், தேசிய அளவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்தாமிடத்திலும், மாநிலத்தில் முதலிடத்திலும் உள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் 10,000 மின்னணு புத்தகங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார் பொன்னவைக்கோ. மைசூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.ஜி. தல்வார் பேசியது:
“நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியே உதவும். இதை உணர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்துவதற்காக நம் நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மின்னணு நூலகமும், மின்னணு வழியாகத் தகவல்களைப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான கட்டுரைகளை மட்டுமல்லாமல், அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும் மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கேற்ப மாணவர்களை ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மின்னணு நூலங்கள்தான் முன்னிலை பெறும்’ என்றார் தல்வார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஜி.ஏ.ஐ.ஏ. கற்றல் மைய நிறுவனர் ரோட் ஹெம்செல் சிறப்புரையாற்றினார். கல்வியியல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் எஸ். தேவநாதன் விளக்கவுரையாற்றினார்.
முன்னதாக, கருத்தரங்கச் செயலர் எஸ். சீனிவாச ராகவன் வரவேற்றார். அமைப்புச் செயலர் இ. ராமகணேஷ் நன்றி கூறினார்.
Leave a Reply