சென்னை:”யானைமலையை குடையும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை’ என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:”அம்மா’வுடன் நாங்களும் தோழமையாக இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, என்ன விவரம் என்று தெரிந்து கொள்ளாமலேயே, உண்மை புரியாமலேயே ஒரு கட்சி, “மதுரைக்கு அருகில் உள்ள யானை மலையை உடைத்து நொறுக்கப் போகிறீர்களா, இதோ ஆர்ப்பாட்டம்’ என்று அறிவித்துள்ளது.இன்னொரு கட்சி உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ம.தி.மு.க.,வின் பொதுச் செயலரோ, அம்மாவின் மனதை குளிர வைக்க, இன்னும் ஒரு படி மேலே போய் யானை மலையில் சிகப்பு கிரானைட் கற்கள் இருப்பதாகவும், அக்கற்களை எடுத்து விற்று, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை குவிக்க திட்டமிட்டிருப்பதாகவும், தனது கற்பனை சக்திக்கேற்ப அறிக்கை விட்டுள்ளார்.”யானை மலையை குடைந்து சிற்ப நகரம் உருவாக்க, அரசு சார்பில் எந்த அறிவிப்பும் செய்யவில்லை’ என்று மதுரையில் தலைமைச் செயலரே அறிவித்திருக்கிறார். யானைமலையில் பெரும் சிற்ப நகரை உருவாக்க முடியும் என்று, “பெரும் தச்சர் அவையம்’ என்ற அமைப்பு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அதை பரிசீலிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழு இன்னும் தனது அறிக்கையை கூடத் தராத நிலையில், அதுபற்றி எவ்விதமான கருத்தும் அரசின் சார்பில் அறிவிக்காத போது, யாரோ ஒரு உறுப்பினர் ஏதோ ஒன்றை பத்திரிகையில் வெளியிட்ட செய்தியை நம்பிக் கொண்டு, அந்தப் பகுதி மக்களை அரசுக்கு எதிராக தூண்டி விடவே, இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்றெல்லாம் சில அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. அரசின் சார்பில் முதல்வரோ, நானோ அல்லது அரசு அதிகாரிகளோ, யானைமலையை உடைக்கவோ, குடையவோ திட்டமிடவில்லை. ஆர்ப்பாட்டம் என்று மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை அப்பகுதி மக்கள் நம்ப வேண்டாம். மக்கள் விரும்பாத எந்தக் காரியத்தையும், எந்தக் காலத்திலும் தி.மு.க., அரசு செய்யாது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply