திண்டுக்கல்:ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பணிக்காலம் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடுவதற்காக சேகரிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான, மூப்பு (சீனியாரிட்டி பேனல்) பட்டியல் மாநில அளவில் தயாரிக்கப் படுகிறது.
ஆனால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் களுக்கான மூப்பு பட்டியல் வட்டார அளவில் தயாராகிறது.
சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் பணிக்கு சேர்ந்த நாள், கூடுதல் கல்வித்தகுதி, பணி வரன்முறைக்கு உட்பட்ட நாள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோர் கையெழுத்திட்டபின் ,ஆட்சேபனைகளின் தன்மையைப் பொறுத்து, தேவையான மாற்றங்களுடன் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.
மூப்பு அடிப்படையில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போன்ற இடங்களுக்கு பதவி உயர்வு பெறலாம். தேவையான காலியிடம் வரும் சூழலில், பலர் தாமதமாக பணி மூப்பு நிலைக்கு பதிவு செய்து கொள்ளும் நிலை நீடித்தது. மேலும் பணி மூப்பு பட்டியலில் இடம்பெறுவதில்,பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தொடக்கக்கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின்படி வட்டார வாரியாக, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் தகுதி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதில் ஆசிரியரின் பெயர், பதவி, முதன்முதலாக பணியில் சேர்ந்த நாள், பணி வரன்முறை (இரண்டு ஆண்டு புரபஷனரி காலம்) முடித்த நாள், சம்பந்தப்பட்ட ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த நாள், கூடுதல் கல்வித்தகுதி, அதற்கான பாடம், குற்ற நடவடிக்கைகள் மற்றும் தண்டனை பெற்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இவை ஆசிரியர், தலைமை ஆசிரியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் கையெழுத்து டன், இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”அனைத்து ஆசிரியர்களின் பணிக்காலம் குறித்த விவரங்கள், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இதற்காக, தற்போது வட்டார வாரியாக விவரம் சேகரிப்பு நடக்கிறது. இந்த புதிய முறை யின் மூலம் பல்வேறு முறைகேடுகள் தடுக்கப்பட்டு, பதவி உயர்வின்போது பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்,” என்றார்.
Leave a Reply