கோவை:”வரும் கல்வியாண்டு தமிழகம் முழுவதும் உள்ள முதல் வகுப்பு குழந்தைகளுக்கு, கலர் கலரான புத்தகங்கள் குறைந்த விலையில் வழங்கப்படும்’ என, தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறினார்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நலச்சங்கத்தின் கோரிக்கை மாநாடு, கோவையில் நடந்தது. மாநாட்டில், தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன் பேசியதாவது:பள்ளிகளில், கடுமையான விதிமுறைகளை அரசு அமல்படுத்துவதாகக் கூறுகின்றனர். பெற்றோரும், குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதே அரசின் நோக்கம். மாணவர்கள் கற்க, பாதுகாப்பான சூழலை பள்ளியில் ஏற்படுத்தி தருவது, பள்ளி நிர்வாகிகளின் கடமை. பள்ளிகளில் திடீரென தீ விபத்து, கட்டடம் இடிதல் போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகின்றன. இவை, அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது.படிப்பு மட்டும் போதாது; மாணவர்களின் பாதுகாப்புக்கும் பள்ளி நிர்வாகங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். வரும் கல்வியாண்டுக்கான முதல் வகுப்பு பாடப் புத்தகங்கள், சிறப்பான வடிவமைப்பில் கலர் படங்களுடன் தயாராகி வருகின்றன.
தனியார் வெளியிடும் புத்தகங்களை விட தரமானதாக இருக்கும் என்றாலும், இதன் விலை குறைவாக இருக்கும். தரமான இந்த புதிய புத்தகங்களை பயன்படுத்தி பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, நிர்வாகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.கோவையில் நடைபெறவுள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி, அனைத்து பள்ளிகளும் காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் விளக்க வேண்டும்.இவ்வாறு தேவராஜன் கூறினார்.
Leave a Reply