பென்னாகரம் : ”பா.ம.க., ஆட்டம் கண்டு விட்டது; அமைதியாகி விட்டது என கூறி வரும் தி.மு.க.,வை அழிப்பது தான் என் முதல் வேலை,” என்று பென்னாகரத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைவதையொட்டி, பென்னாகரத்தில் பா.ம.க., சார்பில் அக்கட்சியினர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி துவக்கி வைத்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பென்னாகரம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த பெரியண்ணன், இத்தொகுதி மக்களுக்கு என்ன செய்துள்ளார். பெரியண்ணன் நல்லது செய்தார் என யாராவது கூற முடியுமா. ‘ஐந்து ஆண்டு முதல்வராக இருந்தும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை; அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று பிரசாரத்துக்கு வந்த முதல்வர் கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ‘நான் உங்களிடம் ஓட்டு கேட்க வரவில்லை. புதிய சட்டசபை கட்டடத்தை வந்து பாருங்கள்; நீங்கள் வரவில்லையென்றால், இன்பசேகரனையாவது அனுப்பி வையுங்கள்’ என கூறியுள்ளார். இன்னும் 50 ஆண்டுகளுக்கு நல்ல முறையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை விட்டு, அவசர கதியில் புதிய சட்டசபை கட்டடத்தை கட்டி வைத்துள்ளார். சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. அதைப் பற்றி தான் சொல்வதற்கில்லையே.
பா.ம.க., ஆட்டம் கண்டு விட்டது, அமைதியாகி விட்டது என புறம்போக்குகள் சிலர் கூறுகின்றனர். இப்போது சொல்கிறேன்; தி.மு.க.,வை அழிப்பது தான் என் முதல் வேலை. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, இத்தொகுதி மக்களை பிச்சை எடுக்க வைத்துள்ளார். சாதனையை சொல்லி ஓட்டு கேட்காமல், சாராயத்தையும், பணத்தையும், மூக்குத்தியையும் கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். எல்லா மக்களையும் குடிகாரர்களாக (குவார்ட்டர் பாட்டிலை கையில் வைத்தபடி) ஆக்கி விட்டனர். தமிழ்நாடு குடிகார நாடாக மாறிவிட்டது. கருணாநிதியை யாரும் மன்னிக்க மாட்டார்கள்; மன்னிக்கவும் கூடாது. சட்டசபையில் இருக்கும் 50 எம்.எல்.ஏ.,க்கள், ஆறு அமைச்சர்கள், பா.ம.க., தொண்டர்களின் உழைப்பால் தான் வெற்றி பெற்றனர். இப்போது கூறுகிறேன்; தி.மு.க.,வுக்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும். தண்ணீர் கொடுக்காத தி.மு.க., வுக்கு, பென்னாகரம் வாக்காளர் கள் தண்ணீ காட்ட வேண்டும். அக்கட்சிக்கு ஓட்டு போட்டால், அராஜகம் தான் தலை தூக்கும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
Leave a Reply