புதிய சட்டசபையில் 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக அரசு கட்டி வரும் புதிய சட்டசபையில் வருகிற 19ம் தேதி 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்யவுள்ளார்.

சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகத்தைக் கட்டி வருகிறது.

இதில் புதிய சட்டசபை கட்டடத்தை வருகிற 13ம் தேதி திறக்கவுள்ளனர். அதில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த பிரமாண்ட விழாவைத் தொடர்ந்து வருகிற 19ம் தேதி புதிய சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இது குறித்து, சட்டசபை செயலர் செல்வராஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், வரும் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள சட்டசபையில் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அன்று காலை, நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

20, 21 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை. 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு பொது விவாதம் நடத்தப்பட்டு, பட்ஜெட்டில் கோரப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளித்து நிறைவேற்றப்படும்.

27ம் தேதி துணை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின், தேதி குறிப்பிடாமல் சபை ஒத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *