டெல்லி: பொருளாதாரம் [^] மீட்சிப் பாதைக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்பட்டாலும், அது தற்காலிகமானதே என்பதற்கான அறிகுறிகள் மீண்டும் தோன்றத் துவங்கியுள்ளன.
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6 சதவீதமாகக் குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது. இதனால் சர்வதேச தேக்க நிலையிலிருந்து தொழில் நிறுவனங்கள் மீண்டு விட்டதாகவே அறிவிக்கப்பட்டது.
ஆனால் மூன்றாம் காலாண்டில் இது குறையும் என தெரிகிறது. இதற்கு முக்கியக்காரணமே வேளாண் உற்பத்தி 2.2 சதவீதமாக குறைந்ததுதான். கடந்த 40 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டதே காரணமாகும். வேளாண் உற்பத்தி மூன்றாம் காலாண்டில் 2.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சரிந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்தை எட்ட வேண்டுமெனில் ஒட்டுமொத்த வளர்ச்சி 8 சதவீதமாக உயர வேண்டும் என்று மத்திய புள்ளியியல் மையம் கருத்துத் தெரிவித்துள்ளது.
Leave a Reply