ஈரோடு : மாற்றுத்திறன் கல்வி மூலம், மனவளர்ச்சி குறைபாடு இருந்த நான்காம் வகுப்பு மாணவன், 60 சதவீதம் குணமடைந்துள்ளான்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகள் முழுமையடைய வேண்டுமெனில், பள்ளி வயது இயலாக் குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைந்து, கல்வி கற்பிக்க வேண்டும். அதற்கான கல்வித் திட்டமாக, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், இயலாக் குழந்தைகள் இனம் காணப்பட்டு, அவர்களுக்கு ஏற்ற முறையில் கல்வி அளிக்கப்படுகிறது. இப்பணியை சிறப்பாக நடைமுறைப்படுத்த, ஒவ்வொரு யூனியனிலும் இரண்டு சிறப்பாசிரியர்கள், நான்கு தசை இயக்கப் பயிற்றுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசு சாரா தொண்டு நிறுவனங்களை கொண்டு ஆண்டுதோறும், இயலாக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் 4,428 இயலாக் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் இயலாத் திறமைக்கேற்ப, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி அளிக்கப்படுகிறது. ஈரோடு ஈ.கே.எம். அப்துல் கனி மதரஸா இஸ்லாமிய ஆரம்பப் பள்ளி நிதியுதவி பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியைச் சேர்ந்த மூளை வளர்ச்சி குன்றியிருந்த (எம்.ஆர்.,) எட்டு வயது சிறுவன் பிரவீன்குமார், சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை இயக்கப் பயிற்றுனர்கள் மூலம், 60 சதவீதம் தெளிவடைந்துள்ளான்.
அவனது தாய் பாரதி கூறியதாவது: பிரவீன்குமார் பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியவனாகவும், கண் பார்வை குறைபாடுடன் பிறந்தான். மூன்று வயதிருக்கும் போது, ஈரோடு மதரஸா பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தேன். பள்ளியில் சேர்க்கும் முன், அவனால் சுயமாக ஒரு கிளாஸ் தண்ணீரைக் கூட எடுத்து குடிக்க முடியாது. கீழே கிடக்கும் பொருட்களை பார்க்க இயலாமல், தடவிப் பார்த்து எடுப்பான். அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பாசிரியர்கள் கொடுத்த பயிற்சியால், 60 சதவீதம் தெளிவடைந்துள்ளான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு பாரதி கூறினார்.
பிரவீன்குமாரின் சிறப்பாசிரியர் கூறியதாவது: வண்ணங்களை வேறுபடுத்துதல், எழுத்துப் பயிற்சி, அகர வரிசையில் எழுத்துக்கள், ஆங்கிலத்தில் பதிலளித்தல் ஆகியவற்றை கற்றுக் கொடுத்தோம். கல்வியுடன் பல் துலக்குதல், சாப்பிடுதல், சட்டை பட்டன் போடுதல் மற்ற அடிப்படை பழக்க வழக்கங்களை படிப்படியாக கற்றுக் கொடுத்தோம். தற்போது, பிரவீன்குமார் முன்பிருந்த நிலையைக் காட்டிலும் தெளிவடைந்துள்ளான். இக்கல்வியால் அவனுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply