200 நடுநிலைப் பள்ளிகள் நிலை உயரும்

posted in: கல்வி | 0

கோவை,​​ மார்ச் 4: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில்,​​ 200 நடுநிலைப் பள்ளிகள்,​​ உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட உள்ளன என்று,​​ பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எஸ்.கார்மேகம் தெரிவித்தார்.

÷அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு வரும் ஆண்டுக்கான பட்ஜெட்,​​ செயல்திட்டம் தயாரிப்பு தொடர்பான மாநில அளவிலான பயிற்சி முகாம்,​​ கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை துவங்கியது.​ பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் இப் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

÷அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.​ இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

÷இத்திட்டத்தில் நடப்பு ஆண்டுக்கு தமிழகத்துக்கு ரூ.139.44 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.​ இதில் தமிழகம் முழுவதும் 200 நடுநிலைப் பள்ளிகள்,​​ உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன.​ ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 7 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 1,400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

÷மேலும் இப்பள்ளிகளுக்கு கட்டடம்,​​ வகுப்பறைகள்,​​ நூலகம்,​​ ஆய்வகங்கள்,​​ கழிவறை உள்ளிட்ட வசதிகளுக்காக தலா ரூ.58.5 லட்சம் ஒதுக்கப்படுகிறது.

÷அதேபோல, ​​ அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் நகராட்சி,​​ மாநகராட்சி,​​ ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் பள்ளிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.​ இதன்படி 4 ஆயிரத்து 200 பள்ளிகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் செலவில் வசதிகள் செய்துதரப்படும்.

÷தமிழகம் முழுவதும் 144 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.​ அதேபோல தலா 100 மாணவியர் தங்கும் வகையில்,​​ 44 மாணவியர் விடுதிகள் கட்டப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *