சென்னை : ”பொறியியல் கல்லூரிகளில் 540 மாணவர்கள் வரை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,” என, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது: தேசிய உயர்கல்வி கவுன்சில் அமைக்கப்பட்ட பின், பொறியியல், மருத்துவம், சட்டம், கலை மற்றும் அறிவியல் துறைகளில் எவ்வளவு பேர் தேவை, இப்படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மாணவர்களை சேர்ப்பது என்பது குறித்த கொள்கை வகுக்கப்படும்.தற்போதைய நிலையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. தற்போது, ஆண்டு தோறும் எட்டு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்றனர். இவர்களில் ஆறு முதல் ஏழு லட்சம் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட சில பிரிவுகளில் தான் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதல் முறையாக பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பொறியியல் கல்லூரிகளில் 540 மாணவர்கள் வரை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த எண்ணிக்கைக்கு மேல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்படாது. முன்பு, பொறியியல் கல்லூரி அனுமதி பெற, அதிகளவிலான நிலம் தேவைப்பட்டது. தற்போது நகரங்களிலும், கிராமங்களிலும் குறைந்த அளவு இடமே தேவைப்படுவதால், பல கல்லூரிகள் ஒரே வளாகத்தில் நான்கைந்து கல்லூரிகளை துவக்கியுள்ளன. இக்கல்லூரிகள் ஒரே ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துவதுடன், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளையும் பொதுவாக பயன்படுத்துகின்றன. இதகுறித்து பல மாணவர்கள் புகார் செய்கின்றனர். இவ்வாறு அனந்தகிருஷ்ணன் கூறினார்.
Leave a Reply