மதுரை: ”மரைன் இன்ஜினியரிங், நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகள், உலகில் அதிக சம்பளம் பெற்று தருவதாகவுள்ளன,” என, மதுரையில் நேற்று நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் கடல் சார் துறை நிபுணர் கே.ஆர்.ஏ.நரசய்யா பேசினார்.
‘கடல்சார் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள்’ குறித்து அவர் பேசியதாவது: பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம். மூன்று பங்கு கடல். கடலில் திறமை வாய்ந்தவர்கள் தான் வெற்றி பெற்றவர்களாக இருந்தனர். சீனாவில் யுவாங்சூ என்ற இடத்தில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டில், தமிழ் வணிகர் ஒருவர் சீனா சென்று வணிகத்தில் ஈடுபட்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. 14ம் நூற்றாண்டுக்கு பின், கடல்மார்க்கத்தை மறந்து விட்டோம். ஆங்கிலேயர் கடல் மார்க்கத்தை கையாண்டதால் உலகை ஆள முடிந்தது. உலக வணிகத்தில் 90 சதவீதம் கடல் மூலம் நடக்கிறது. சக்தியை பெருக்க, கப்பல், கடல் திறனை பெருக்க வேண்டும். கப்பல் துறையில் கப்பலை செலுத்துதல்(நேவியேட்டர்), பொறியியல் பிரிவு (மரைன் இன்ஜினியரிங்)உள்ளன. இதுவரை யாரும் அறியப்படாத துறை. கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அதிக சம்பளம் பெற்று கொடுக்கும் துறை இது. இத்துறையை விட்டு வெளியில் சென்றாலும் நல்ல வேலைவாய்ப்பு உண்டு. எல்லா துறைகளிலும் வேலை செய்யலாம்.
மரைன் இன்ஜினியரிங்கில் சேர பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். உடல் திறன், கண் பார்வை கொண்டவராக இருத்தல் வேண்டும். நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். இளநிலை பொறியாளராக பணியில் சேரலாம். ஏழு ஆண்டுகளில் தலைமை இன்ஜினியராக மாறலாம். மேலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து ஓராண்டு பயிற்சி பெற்றாலும், மரைன் இன்ஜினியர்களாக வாய்ப்புகள் உள்ளன. இதற்காக மும்பை, கொல்கட்டாவில் ‘மெரி’ என்ற இன்ஸ்டிடியூட்டுகள் செயல்படுகின்றன. கப்பல் செலுத்தும் நேவியேட்டர்களாக பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். உடல் தகுதி, கண் பார்வைபெற்றவராக இருத்தல் வேண்டும். மூன்று ஆண்டுகள் கல்லூரியிலும், ஓராண்டு கப்பலிலும் பயிற்சி பெற வேண்டும்.
உலகில் பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு இரும்பு தாது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து மட்டும் 100 மில்லியன் டன் இரும்பு தாது கடல் மார்க்கமாக கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டுதோறும் கப்பல் துறை 8 சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. பொருளாதார சிக்கல் காரணமாக பல துறைகளில் பாதிப்பு ஏற்பட்டது. கப்பல் துறையில் எந்த பாதிப்பும் இல்லை. 2003-2004ல் 344 மெட்ரிக் டன் சரக்குகள் கப்பல்கள் மூலம் கையாளப்பட்டன. இது, 2008-2009ல் 530 மில்லியன் டன்னாக உயர்ந்தது. 14 சதவீதம் கப்பல் வணிகம் வளர்ச்சி பெற்றுள்ளது. 1971ல் 255 கப்பல்கள் மட்டுமே இருந்தன. 2000ல் 514 , தற்போது 850 கப்பல்களும் உள்ளன. மூன்று லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய கப்பல்கள் விடப்பட்டுள்ளன.
இத்துறையில் வெளிநாடுகளில் இந்தியர்கள் விரும்பி எடுக்கப்படுகின்றனர். வெளிநாட்டு கப்பல்களில் 81 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். உலகில் அதிக சம்பளம் பெற்று தரும் படிப்பு இது. கடலில் பணியில் ஈடுபடுவர்களுக்கு வருமான வரி பிடித்தம் கிடையாது. 2015ல் மூன்று மடங்கு ஆட்கள் இத்துறையில் தேவைப்படுவர். இத்துறையில் பயிற்சி பெறுவோர், பயிற்சியை முடிக்கும் முன்பாகவே நியமிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 56 பெண்கள் கப்பல்களில் கேப்டன்களாக பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். ஆறு மாதம் கடலில் வேலை பார்க்க வேண்டும். நான்கு மாதம் விடுப்பு அளிக்கப்படும். கப்பல் தலைமை இன்ஜினியர்கள், கேப்டன்கள் மாதம் 7 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர். இவ்வாறு பேசினார்.
Leave a Reply