சென்னை, ஏப்.9: சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது என்று முதல்வர் கூறினார். அதே சமயம், தாங்கக் கூடியவர்களுக்கு சிறிய அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டி. யசோதா, “”மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. மின் வெட்டு தொடரும் நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தினால் பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது” என்றார்.
அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி அளித்த விளக்கம்:
“மின் கட்டணம் உயரப் போகிறது’ என்று பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் இங்கே பேசியிருக்கிறார்கள். மின் கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்து ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அது தன்னிச்சையாக இயங்கக்கூடிய குழு. மின் வாரியத்தின் சார்பாக பரிந்துரைகளை இக்குழு அனுப்ப முடியும்.
நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். யாரும் பீதி அடையத் தேவையில்லை. தாங்கக் கூடியவர்களுக்குத்தான் மின் கட்டணத்தில் ஒரு சிறிய உயர்வு இருக்கும். சாதாரணமானவர்களுக்கு குறிப்பாக சாதாரண வீடுகளுக்கு நிச்சயமாக மின் வாரியம் கட்டண உயர்வை சிபாரிசு செய்யவில்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார் முதல்வர் கருணாநிதி.
Leave a Reply