பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு ரூ.21 கோடி: அமெரிக்கா உதவி

posted in: உலகம் | 0

usaflarவாஷிங்டன், ஏப்.15: பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு சுமார் ரூ.21.60 கோடியை அமெரிக்கா வழங்கவுள்ளது.

மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக பல்வேறு உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்தியாவுக்குப் பொருள் உதவி, பயங்கரவாதிகளை ஒழிப்பதில் நவீன பயிற்சி உள்ளிட்ட உதவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்து வருகிறது.

இதுகுறித்து பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒருங்கிணைப்பாளர் டேனியல் பெஞ்சமின் புதன்கிழமை கூறியதாவது:

பயங்கரவாதத்துக்கு எதிரான உதவி (ஏடிஏ) என்ற கொள்கையை அமெரிக்கா நீண்ட நாட்களாக கடைப்பிடித்து வருகிறது. உதவி கோரும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு தேவைப்படும்போதெல்லாம் அமெரிக்கா உதவி வருகிறது.

2010-11-ம் நிதியாண்டில் இந்தியாவில் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான உதவியாக 45 லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.21.60 கோடி) அமெரிக்கா வழங்கவுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது இரண்டு மடங்காகும்.

இந்தியா கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த உதவி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

மும்பை தாக்குதலின்போது கொல்லப்பட்ட 166 பேரில் 6 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெஞ்சமின் கூறியதாவது: இந்தியாவுக்கு உதவுவதைப் போலவே பாகிஸ்தானுக்கும் தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை வேரறுக்க தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களை வேரறுக்க அமெரிக்கப் படைகள் அங்கு முகாமிட்டு சண்டையிட்டு வருகின்றன.

பாகிஸ்தான் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகளில் அதிகளவில் பயங்கரவாதிகள் ஊடுருவி, பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழித்துக் கட்டுவதற்கு அமெரிக்கப் படைகள் உதவி வருகின்றன.

பாகிஸ்தானுக்குத் தேவையான நிதி உதவியையும் அமெரிக்கா வழங்கி வருகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்காக 5 ஆண்டுகளுக்குத் தேவையான நிதியை அமெரிக்கா வழங்கவுள்ளது. 2011-ம் ஆண்டுக்குத் தேவைப்படும் அதிக அளவு நிதியை அமெரிக்கா விரைவில் அளிக்கும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *