மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது யார்? ஆய்வில் தகவல்

posted in: கல்வி | 0

இன்றைய மாணவர்கள் 10ம் வகுப்பிலேயே தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் துவங்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், மேற்கு வங்கத்தில், 75 நிறுவனங்களின் 692 பணியாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களின் குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கின்றனர் என்பதுதான் ஆய்வின் மையப் பொருள். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலுபவர்களில் 25 சதவீதம் பேர், எதிர்காலம் பற்றிய சிந்தனையில் ஈடுபடுகின்றனர். 50 சதவீதம் பேரில், இளம் பெற்றோரைத் தவிர மற்ற பெற்றோர், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த முடிவு எடுப்பதில் தாமதிப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட கல்வியாளர்கள் கூறியதாவது:

இப்போது வாழ்க்கை என்பது பல்வேறு தொடர்புகள், சிக்கல்கள், வாய்ப்புகள் நிறைந்ததாக ஆகிவிட்டதால், வேலைவாய்ப்பு என்பதும் இவற்றோடு தொடர்புடையதாக உள்ளது. நமது கல்விமுறையில், ஒரு மாணவன் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்தால் இறுதிவரை அதிலிருந்து விலகவே முடியாது. பிளஸ் 2வில் கலைப் பிரிவை ஒருவன் தேர்ந்தெடுத்துவிட்டால் அவனால், பொறியியலுக்கோ, உயிரிதொழில்நுட்பத்துக்கோ மாறமுடியாது. இது ஒரு சிக்கல். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2வில் எதிர்காலம் பற்றிய சிந்தனை முழுமையாக இருக்க முடியாது.

அந்த நிலையில், அவர்களுக்கு ‘ஜியோஇன்பர்மேடிக்ஸ்’ படிப்பு பற்றியோ, ‘கம்ப்யூட்டேஷனல் பயாலஜி’ படிப்பு பற்றியோ தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அறிவியல் தான் எதிர்காலம் என்று முடிவு செய்ய முடியும். அதற்கான அடிப்படை அப்போது கிடைக்கிறது. பள்ளி இறுதியில் எடுக்கப்படும் முடிவுக்கும், கல்லூரி இறுதியில் எடுக்கப்படும் முடிவுக்கும் வித்தியாசம் உண்டு. பள்ளி இறுதியில் மாணவன் தன்னையும், தன் சூழலையும் உணர்ந்திருப்பான் என்று உறுதியளிக்க முடியாது. கல்லூரி இறுதியில், தன்னையும், தன் சூழலையும் அவன் உணர வழியிருக்கிறது.

வேலைவாய்ப்பு சிந்தனைக்கு அடிப்படையே ஒருவன் தன்னை புரிந்து கொள்வதுதான். அதனால் இந்த சிந்தனை ஒன்பதாம் வகுப்பில் துவங்கினால் எப்போது அவன் வேலைவாய்ப்பில் சிறந்ததை எட்டுகிறானோ அப்போதுதான் அது முடிகிறது. இந்தச் சிந்தனை பிளஸ் 1, பிளஸ் 2வில் தீவிரமடைகிறது. ஆனால், இதன் முழுமை என்பது தனிநபரைச் சார்ந்தது.

மாணவனின் முடிவில் அவனது குடும்பச் சூழல்தான் பெரிதும் எதிரொலிக்கிறது. அவன் பெற்றோர் படித்தவர்களாக, தற்கால நிலையைப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவன் தேடலுக்கு, அவர்களால் பெயரளவில் உதவ முடியும். எதிர்மாறாக இருந்தால் மாணவன் மட்டுமே முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

தரம் உயர்ந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவனுக்கு வேலைவாய்ப்புகள் குறித்த வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சாதாரண கல்வி நிறுவன மாணவன், தானே முயன்று தேடினால் தான் உண்டு. அதனால் தான் மாணவனின் எதிர்காலத்தில் பள்ளியும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெற்றோர், தங்கள் குழந்தைகளின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உதவ முடியும்.

மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையான மாணவர்களின் முடிவில் பெற்றோரின் முடிவுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால், பள்ளிகளில் பெற்றோருக்கு என்று தனியாக, ‘கவுன்சிலிங்’ நடத்தப்பட வேண்டும். தற்போதைய சூழலைப் புரிந்து கொண்டு, தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் உதவுவதற்கு இம்முறை பெரிதும் உதவும். இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *