புதுடில்லி: மாநில கவர்னர்கள் மாற்றம் கொண்டு வரும்போது மத்திய அரசு தனது மனம் போல் அடாதடியாக அதிகாரத் தோரணையில் நடந்து கொள்ளக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் இன்று ( வெள்ளிக்கிழமை ) வெளியான தீர்ப்பில் 5 பேரை கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2004 ம் ஆண்டில் மத்தியில் அதிகாரத்திற்கு வந்த மத்திய அரசு சில கவர்னர்களை நீக்கியது. நீக்கப்பட்ட உ . பி., அரியானா, குஜராத், கோவா ஆகிய கவர்னர்கள சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அரசியல்வாதிகள் பலியிடும் ஆடுகளாக : மனுவை தலைமை நீதிபதி கே.ஜி., பாலகிருஷ்ணன் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது.மனுதாரர் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி ஆஜராகி வாதாடினார். இவர் தனது வாதத்தின்போது அரசு அமைப்பில் பணியாற்றும் அதிகாரிகள் , தேர்வு செய்யப்படும் அரசியல்வாதிகள் பலியிடும் ஆடுகளாக சிக்கி விடக்கூடாது. அதிகாரிகளுக்கு உரிய மரியாதையும், மதிப்பும் வழங்கப்பட வேண்டும். என்றார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்களுடைய விவாதத்தின்போது கவர்னர்கள் மத்திய, மாநில அரசுக்கு பாலமாக திகழ வேண்டியவர்கள், எனவே அரசு தங்களுடைய புரிந்துணர்வை அறிந்து செயல்படும் நபர்களை கவர்னராக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது என வாதிட்டனர். இதனை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது.
நன்னடத்தை மற்றும் ஒழுங்கீனம் : இந்த விசாரணையில் மத்திய அரசில் மாற்றம் ஏற்படும் போது கவர்னரையும் மாற்றம் செய்யும் போக்கு தவறானது என குறை கூறியுள்ளது. புதிய அரசு பதவியேற்கும் போது மாநில கவர்னர்களை தங்களுடைய இஷ்டம் போல, அரசுக்கு ஏற்றாற்போல் தானே முடிவு எடுத்து மாற்றம் செய்வது ஏற்க முடியாதது. இந்த முடிவு சரியல்ல. நன்னடத்தை மற்றும் ஒழுங்கீனம் குறித்து புகார் எழுந்தால், இந்த புகாருக்கு ஆதாரமும் , நிரூபணமும் இருந்தால் மட்டுமே கவர்னரை மாற்றம் செய்யலாம் . இல்லாத பட்சத்தில் கவர்னர் மாற்றம் மத்திய அரசின் இஷ்டத்திற்கு இருக்கக்கூடாது. இவ்வாறு இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply