புதுடில்லி : கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், ஆந்திர எல்லையில் சுரங்கப் பணியை தொடர்ந்து நடத்த, சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது.
ஆந்திரா, கர்நாடக எல்லையில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் பெரிய அளவில் சுரங்கப் பணியை மேற்கொண்டு வந்தனர்.
ஆந்திர அரசு ஒப்புதல் அளித்த பகுதிகளை விட வனப்பகுதியை ஆக்கிரமித்து தொழில் நடத்துவதாக இவர்கள் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து, ஆந்திர எல்லையில் ரெட்டி சகோதரர்கள் எவ்வளவு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்பதை கணக்கெடுக்கும் படி, மத்திய நில அளவைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் சுரங்கப் பணியை நிறுத்தும் படி ரெட்டி சகோதரர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சுரங்கப் பணியை மேற்கொள்ள உத்தரவிடும் படி கோரி, ரெட்டி சகோதரர்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக் வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆந்திர எல்லையில் பிரச்னையில்லாத பகுதியில் சுரங்கப் பணியை தொடரலாம் என, அனுமதி வழங்கியுள்ளது. அதில், ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் அரசு அனுமதித்த இடங்களில் சுரங்கப்பணி தொடரலாம். அதுவும் ஆந்திர அரசு அளித்த லீஸ் நிலங்களில் அப்பணியை தொடர தடை இல்லை. அதே சமயம், சர்வே இந்தியா அமைப்பினர் விதித்த தடைப்பகுதியில் சுரங்கம் வெட்டக் கூடாது என்று கூறியுள்ளது.
நில அளவைத் துறையினர் இரண்டு மாத காலத்திற்குள் ஆந்திர, கர்நாடக எல்லையில் ரெட்டி சகோதரர்களின் சுரங்கம் நடத்தும் பரப்பளவு குறித்த கணக்கை ஒப்படைக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. நில அளவைத் துறையினர் கேட்கும் போதெல் லாம் சுரங்கப்பணியை நிறுத்த வேண்டும் எனவும், இந்த பெஞ்ச் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
Leave a Reply