கிரேடு’ முறையால் தேர்வு முடிவில் பரபரப்பு இல்லை!

posted in: கல்வி | 0

6990சென்னை: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் ‘கிரேடு’ முறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள், பெற்றோரிடையே வழக்கமாக காணப்படும் பரபரப்பு இல்லாமல் போனது.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, அந்தமான் – நிகோபர் தீவுகள், டாமன் – டையூ ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் குறித்து, மண்டல அலுவலர் நாகராஜு நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு சென்னை மண்டலத்தில் 1,827 பள்ளிகளைச் சேர்ந்த, ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் தேர்வு எழுதினர். இதில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 465 பேர் மேற்படிப்பு படிக்க தகுதி பெற்றுள்ளனர். 4,461 பேர் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். 490 பேர் தேர்வு எழுதவில்லை. மேற்படிப்புக்கு தகுதி பெற்றோர் 96.18 சதவீதம்.

சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை, புதுச்சேரி முதலிடம் பெற்றுள்ளது. இங்கு எட்டு பள்ளிகளைச் சேர்ந்த 402 பேர் தேர்வு எழுதி, 400 பேர் மேற்படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.50 ஆகும். அந்தமான் நிகோபர் தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். இங்கு 97 பள்ளிகளைச் சேர்ந்த 6,570 மாணவர்கள் தேர்வெழுதி, 3,426 பேர் மேற்படிப்பிற்கான தகுதியை பெற்றுள்ளனர். தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில், 3,144 பேர் உள்ளனர். இங்கு 252 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்ச்சி சதவீதம் 52.15 ஆகும்.

தமிழகத்தில், 193 பள்ளிகளைச் சேர்ந்த 17 ஆயிரத்து 423 பேர் தேர்வு எழுதினர். இதில் 17 ஆயிரத்து 245 பேர் மேற்படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். 178 பேர் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். 29 பேர் தேர்வு எழுதவில்லை. மேற்படிப்பிற்கான தேர்ச்சி சதவீதம் 98.98 ஆகும்.

சென்னை மண்டல அளவில், தேர்வெழுதிய 52 ஆயிரத்து 36 மாணவியரில், 50 ஆயிரத்து 198 பேர் மேற்படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.47 ஆகும். மாணவர்கள் 64 ஆயிரத்து 891 பேர் தேர்வு எழுதி அதில் 62 ஆயிரத்து 267 பேர் மேற்படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.96 ஆகும். கிரேடு வெரிபிகேஷன் செய்ய விரும்புவோர், 21 நாட்களுக்குள், ஒரு பாடத்திற்கு 100 ரூபாய் வீதம் டி.டி., செலுத்த வேண்டும். இவ்வாறு சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலர் நாகராஜு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *