வாஷிங்டன்: புற்றுநோய் போல் பரவி வரும் பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் ஒபாமாவை கர்சாய் சந்தித்துப் பேசினார்.
அதன்பின், ஒபாமா நிருபர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் எனும் புற்றுநோய் அந்நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பாகிஸ்தானின் எதிரியாக இந்தியா இருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தானில் பெருகியுள்ள பயங்கரவாதத்தால் தான் அந்நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பழைய சந்தேகங்களையும், மோசமான பழக்கங்களையும் ஒழித்து பாகிஸ்தானுடன் தொடர்ந்து ஒத்துழைத்து, ஆப்கானிஸ்தானில் ஸ்திரமான நிலையை உருவாக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது.
ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. பாகிஸ்தான் பாதுகாப்பாக இருந்தால் தான் அண்டை நாடான ஆப்கனும் பாதுகாப்பாக இருக்கும்.
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தங்கள் வசமாக்கிக் கொள்ள பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒரே நாளில் இந்த விஷயத்தில் வெற்றி கிட்டி விடாது. இந்த நடவடிக்கையால் ஏராளமான உயிர் சேதம் ஏற்படும். ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் தான் அல்-குவைதா மற்றும் தலிபான்களின் சதி ஆலோசனை மையமாக விளங்குகிறது. இவ்வாறு ஒபாமா கூறினார்.
Leave a Reply