நெய்வேலி : “என்.எல்.சி., அதிகாரிகளை கடத்துவோம்’ என்று பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் ஆவேசமாக பேசினார். என்.எல்.சி., பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் முதல் அனல் மின் நிலையம் அருகே “கியூ’ பாலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது.
100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உண்ணாவிரத்தில் மயக்கமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று மாலை பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் பங்கேற்று பேசியதாவது: என்.எல்.சி.,ஒப்பந்த தொழிலாளர்களுக்காக அறவழியில் போராடும் எங்களை தீவிரவாதிகளாக மாற்றாதீர்கள். 48 மணி நேரத்திற்குள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இல்லையெனில் என்.எல்.சி., சேர்மன் மற்றும் இயக்குனர்கள் வீடு, கார்களை அடித்து நொறுக்கி அவர்களை கடத்துவோம். எங்கள் மீது எந்த வழக்கு போட்டாலும் கவலை இல்லை. இதை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டு தான் நானும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளேன்.
நான் அனுப்பும் பேச்சுவார்த்தை குழுவினருடன் என்.எல்.சி., நிர்வாகம் உடனடியாக பேச்சு வார்த்தை நடந்தி சுமுகமாக முடிக்காவிட்டால் “ஏசி’ கார்களில் செல்லும் என்.எல்.சி., அதிகாரிகளின் உயிர்களுக்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது. என் மீது கொலை வழக்கு போட்டாலும் அதை சந்திக்கத் தயார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பா.ம.க., வினரையும் ஒன்று திரட்டி எனது தலைமையில் என்.எல்.சி., யை கலவர பூமியாக மாற்றுவேன். இவ்வாறு எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.
Leave a Reply