மத்திய அமைச்சகத்தின் தொழிலாளர் நலத்துறை சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் வேலை வாய்ப்புகள் குறித்து சமீபத்தில் 6வது காலாண்டு ஆய்வை நடத்தியது.
இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த 21 மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 815 நிறுவனங்களிடையே ஜனவரி 2010 முதல் மார்ச் 2010 வரையிலான காலாண்டுக்கான இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சர்வதேசப் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை முழுமையாக ஆராய்வதற்காக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது காலாண்டின் முதலிலும், காலாண்டின் பின்னரும் கள ஆய்வுகளை மேற்கொண்டதன் மூலம் வேலை வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகளின் முக்கிய அம்சங்கள் இங்கே…
ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறையிலேயே மிக அதிகபட்சமாக 6.9 லட்சம் எண்ணிக்கையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதேபோல் இந்தத் துறைகளில் தான் சம்பள உயர்வும் மிக அதிகபட்சமாக 9.3 சதவிகித அளவு உயர்ந்துள்ளது.
டெக்ஸ்டைல், தோல் பொருள், உலோகங்கள், ஆட்டோமொபைல், ஆபரணக் கற்கள் மற்றும் நகைத் தொழில், டிரான்ஸ்போர்ட், ஐ.டி., பி.பி.ஓ., கைத்தறித் துறைகளில் இந்தக் காலாண்டில் வேலை வாய்ப்பு விகிதம் இதற்கு முந்தைய காலாண்டைவிட 0.16 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் கடந்த காலாண்டைவிட இந்தக் காலாண்டில் இந்த 8 துறைகளில் 10.66 லட்சம் அளவிற்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி யுள்ளன.
டெக்ஸ்டைல் மற்றும் கைத்தறித் துறைகள் தவிர்த்து பிற துறைகள் அனைத்திலுமே வேலை வாய்ப்புகள் கணிசமாகக் கூடியுள்ளன. இதேபோல் ஒப்பந்தப் பணிகளிலும் 0.74 லட்சம் அளவிற்கு புதிய பணிவாய்ப்புகள் பெருகியுள்ளன. ஏற்றுமதி நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் 1.87 லட்சம் அளவிற்கு வேலை வாய்ப்புகள் கூடியுள்ளன. மேலே குறிப்பிட்ட எட்டு துறைகளிலும் சேர்த்து ஊழியர்களின் வருமானம் 7.1 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தோல் பொருள் கிளைகளில் வருமானம் 1.4 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.
Leave a Reply