கோவை : “கண்காட்சி அரங்கில் சர்ச்சைக்குரிய எதுவும் இடம் பெறக்கூடாது’ என, செம்மொழி மாநாடு கண்காட்சி அமைப்புக் குழு தலைவர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக, மாநாட்டு வளாகத்தில் கண்காட்சி அரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியை சிறப்பாக அமைப்பது தொடர்பாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.குழுவின் தலைவரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு, குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகளைக் கேட்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: கண்காட்சியின் ஒரு பகுதியாக புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.கண்காட்சி அரங்கிற்கு அருகில் இதற்காக இடம் ஒதுக்க முன்பு தீர்மானிக்கப்பட்டது. தற்போது, இட வசதியைக் கருத்தில்கொண்டு, அவினாசி சாலையின் தெற்குப் புறமாக அதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அரங்கமாக இந்த கண்காட்சி அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக, ஓர் அரங்கம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதிதாக ஒளி-ஒலி காட்சி அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்த ஒளி-ஒலி காட்சியை அமைக்கும் பணி, தமிழக அரசின் “எல்காட்’ நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டு, அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் வைக்கப்படும் ஓவியங்கள் மற்றும் பொருட்களின் பட்டியல், குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இஸ்ரோ’ சார்பில் ஓர் அரங்கம் அமைக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.கண்காட்சியில் சர்ச்சைக்குரிய எந்த அம்சமும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும், கண்காட்சி அரங்கை அமைப்போருக்கும் உள்ளது. மொழிப்பற்று, தமிழ் உணர்வு, தமிழ்ப் பண்பாடு இவற்றை மட்டுமே வெளிப்படுத்துகிற வகையில் கண்காட்சி இருக்க வேண்டும்.ஒளி-ஒலி காட்சிகளையும் மிகத் தீவிரமாக ஆராய்ந்து, அதிலும் எத்தகைய காட்சிகள் இடம்பெற வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில், கண்காட்சியின் இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Leave a Reply