எட்டாம் வகுப்பு வரை ‘பெயில்’ கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், 14 வயது வரை உள்ள குழந்தைகளை, ‘பெயில்’ செய்யக்கூடாது என்று, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், கடந்த ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 14 வயதிற்குட்பட்ட அனைவரும், எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்கும் உரிமையை பெறுகின்றனர்.

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களை ஏழை, எளிய குழந்தைகளுக்காக ஒதுக்கி, இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்றும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்திற்கான ஆலோசனைக் குழு, பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இதைப் பின்பற்றி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம், ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களும் (உடல் ஊனமுற்றோர் உட்பட) இலவச மற்றும் கட்டாயமாக கல்வி பெறுவதற்கு வழிவகை செய்கிறது. எனவே, தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியில் சேர்ந்து படிக்க உரிமையுண்டு. இந்த சட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு உள்ள பல்வேறு பொறுப்புகள் குறித்து, சட்ட ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பள்ளி நிர்வாகம், மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை, பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேர்க்காமல் இருந்தது கண்டறிந்தால், அவர்களுடைய வயதிற்கு தகுந்தாற்போல் உரிய வகுப்பில் உடனடியாக சேர்த்து, வகுப்பிற்கு ஏற்ப உரிய சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

கல்வியாண்டு துவங்கும் தேதியில் இருந்து, ஆறு மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்குள் சேர வரும் மாணவர்களை பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், அங்கிருந்து, ‘டிசி’ பெற்று, அருகில் உள்ள வேறொரு பள்ளியில் சேர்ந்து படிக்க மாணவர்களுக்கு உரிமை உண்டு.

மாநிலத்திற்குள் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கோ அல்லது வேறொரு மாநிலத்தில் உள்ள பள்ளிக்கோ மாறுதல் பெற்று ஆரம்பக் கல்வியை படிக்க உரிமையுண்டு. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது, பள்ளி நிர்வாகம் நன்கொடை வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால், சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி தண்டனை விதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எந்தவிதமான துன்புறுத்தலையும் தரக் கூடாது. அதேபோல், எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறுவதற்கு எந்தவிதமான தேர்வுகளையும் எழுத தேவையில்லை. இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கடைபிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோர் எடுக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *