புதுடில்லி : “”தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் முன்னரே சட்டசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை; தேர்தல் பற்றி ஆலோசிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது,” என புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.
தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த நவீன் சாவ்லாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி நேற்று பொறுப்பேற்றார். கடந்த 1971ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பிரிவைச் சேர்ந்த இவர், நாட்டின் 17வது தலைமை தேர்தல் கமிஷனர். 1947ம் ஆண்டு டில்லியில் பிறந்த குரேஷி, வரலாற்றில் முதுகலை பட்டமும், பின்னர் தகவல் தொடர்பு மற்றும் சமூகவியல் மார்க்கெட்டிங்கில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். கடந்த 2006ம் ஆண்டில் தேர்தல் கமிஷனரானார். அதற்கு முன், மத்திய அரசில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறைச் செயலராக இருந்தார்.
தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்ற பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலில் பண பலம் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த பண பலத்தை கட்டுப்படுத்த தேர்தல் கமிஷன் முன்னுரிமை வழங்கும். தேர்தலின் போது பண பலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், அதைக் கட்டுப்படுத்தவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, தேர்தல் செலவு கணக்குகளை கண்காணிக்கும் பார்வையாளர்களுடன் கமிஷன் பல முறை ஆலோசித்துள்ளது. அதனடிப்படையில், விரைவில் விரிவான வழிகாட்டிக் குறிப்புகள் வெளியிடப்படும். தற்போது, அந்த வழிகாட்டிக் குறிப்புகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் அவை நடைமுறைக்கு வரும். இதன் மூலம் தேர்தலில் பண ஆதிக்கத்தை தடுக்க முடியும் என நம்புகிறோம். தேர்தலில் அதிக அளவு வாக்காளர்கள் பங்கேற்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுப்போம். அதற்கு அதிக முன்னுரிமை அளிப்பேன். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் நம்பகமானது; அதில், எந்தவிதமான முறைகேடுகளும் செய்ய முடியாது என தேர்தல் கமிஷன் கூறி வருகிறது. அதனால், அவற்றை பயன்பாட்டிலிருந்து ஒதுக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை.
தமிழகத்தில் தேர்தலா? மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. அம்மாநிலங்களில் முன்னரே தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை. தற்போது ஆட்சியில் உள்ள அரசின் பதவிக்காலம் முடிவடையும் தேதிக்கு ஆறு மாதத்திற்கு முன்னர் தான், நாங்கள் எங்களின் தேர்தல் பணிகளை துவக்குவோம். அதனால், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் விரைவில் தேர்தல் என்ற கேள்வியே எழாது. தமிழகத்தில் மே 2011ல் தான் சட்டசபை தேர்தல் நடக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் 2011 ஜூன் 11க்கு முன்னதாகத்தான் தேர்தல் நடக்க வேண்டும். அதனால், இந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி வரை அதைப் பற்றி நாங்கள் பேச மாட்டோம். எந்தவிதமான அரசியல் நிர்பந்தங்களுக்கும் ஆட்படாமல் பாதுகாப்பாக இருக்கும் வகையில், அரசியல் சட்டம் மூலம் தேர்தல் கமிஷனுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் கமிஷனின் சுதந்திரமான செயல்பாட்டிற்கு பங்கம் வராமல் பாதுகாத்து வருகிறது.
சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷன் தொடர்ந்து போராடி வருகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருந்தாலும், இவற்றில் பல பிரச்னைகள் உள்ளன. யாருக்கு ஓட்டுரிமை அளிப்பது, ஓட்டுகளை தபால் மூலம் போடலாமா என்பது போன்ற பிரச்னைகள் உள்ளன. தேர்தல் கமிஷனும், வெளிநாட்டு வாழ் இந்திய விவகார அமைச்சகமும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளன. பணம் கொடுத்து சாதகமாக செய்திகளை வெளியிடச் செய்வது தொடர்கிறது. இதைத் தடுக்க கடுமையான வழிகாட்டிக் குறிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு குரேஷி கூறினார்.
தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள இவர், இரண்டு ஆண்டு காலத்திற்கும் குறைவாகவே இந்தப் பதவியில் இருப்பார். இந்தக் கால கட்டத்தில் தான், பீகார், அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் கமிஷனராக இருந்த குரேஷி, தலைமை தேர்தல் கமிஷனராகியுள்ளதால், கமிஷனின் நடைமுறைப்படி மூன்றாவது கமிஷனராக புதிதாக ஒருவர் நியமிக்கப்படுவார்.
Leave a Reply