புதுடில்லி : நக்சலைட்களின் நடமாட்டத்தை
கண்காணிக்கவும், அவர்கள் மறைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கவும் உதவும் வகையிலான அதி நவீன வாகனம், பாதுகாப்பு படையினருக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.
சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில், நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. போலீசாரை கடத்திச் சென்று கொலை செய்வது, வீடுகளை சூறையாடுவது, ரயில்களை கவிழ்ப்பது போன்ற விஷமச் செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். அடர்ந்த வனப் பகுதியில் மறைந்திருந்து வன்முறையில் ஈடுபடுவதால், இவர்களை கண்டுபிடிக்க முடியாமல், பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில், இதற்காக அதி நவீன வாகனம் தயாரிக்கப்பட்டு, அவை, பாதுகாப்பு படையினருக்கு விரைவில் கொடுக்கப்படவுள்ளன. அடர்ந்த வனப் பகுதிகளிலும், கரடு முரடான பிரதேசங்களில் இந்த வாகனம், அதி வேகமாகச் செல்லும். இந்த வாகனத்தில் ரேடாரும் பொருத்தப்பட்டுள்ளது. நக்சலைட்களின் நடமாட்டத்தை இதன் மூலம் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும், கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப வசதியும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, நவீன தகவல் தொடர்பு சாதனங்களும் இதில் உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இதுபோன்ற வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போது முதல் முறையாக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
Leave a Reply