அந்தமான் அருகே புதிய புயல் சின்னம்-தமிழகத்தில் மழை பெய்யலாம்

posted in: மற்றவை | 0

சென்னை: வங்கக் கடலில் அந்தமானுக்கும், தாய்லாந்துக்கும் இடையே புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு இதனால் ஆபத்து இல்லை.


அதேசமயம், ஏற்கனவே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆந்திரா அருகே தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யலாம்
என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழத்தில் வட கிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கி விட்டது. இருப்பினும் பெரிய அளவில் இன்னும் மழை பெய்யஆரம்பிக்கவில்லை. அவ்வப்போது, ஆங்காங்கு பெய்து வருகிறது.

வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. ஆனால் மேலடுக்கு காற்றுச் சுழற்சி ஆந்திரா பக்கம் நகர்ந்திருப்பதால் தமிழகத்தில் மழையின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அந்தமானுக்கும், தாய்லாந்துக்கும் இடையே ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அது வட மேற்கு திசையில் நகருகிறது. இதனால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை. அதன் போக்கு தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. சில இடங்களில் மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு நேற்று 3 பேர் பலி:

இதற்கிடையே தமிழகத்தில் பெய்து வரும் பரவலான மழைக்கு நேற்று சிறுமி உள்பட 3 பேர் பலியானார்கள்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக குளம், குட்டைகளில் மழை நீர் நிரம்பி உள்ளது. மழை காரணமாக பனப்பாக்கம் ஆற்றில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் வந்தது. ஆற்றின் தரைப்பாலத்தின் கீழ் 6 அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இந்த வெள்ளத்தில் சிக்கி நந்தினி என்ற 10 வயது சிறுமியும், மலர் என்ற 15 வயதுப் பெண்ணும் பலியானார்கள். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் பெய்த கன மழையில் சுவர் இடிந்து சபரான் (35) என்ற பெண் பலியானார். இவர் கடத்தூர் அருகே உள்ள இ.மேட்டுப்புதூரை சேர்ந்தவர்.

கன மழை காரணமாக கோபி தாலுகா அலுவலகத்தில் இருந்த 50 ஆண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்களில் ஏராளமான மரங்கள் பலத்த சேதம் அடைந்தன.

கவுந்தப்பாடியை அடுத்த அணைப்புதூர் என்ற ஊரில் துரைசாமி என்பவரின் பட்டுப்புழு கூடாரம் மீது இடி தாக்கியதில் கூடாரம் முழுவதும் எரிந்து நாசமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *