வாஷிங்டன்:”ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதிப்படுத்த வேண்டும்.
தற்காலிக எச்.1பி., விசா கட்டண உயர்வு மற்றும் “அவுட்சோர்சிங்’ பிரச்னைகளில் இந்தியா கொண்டுள்ள கவலையை கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில், அமெரிக்க அதிபர் ஒபாமாவை கேட்டுக் கொண்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் (யு.எஸ்.ஐ.பி.சி.,), அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து அக்கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:ஐ.நா., தன் பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வதற்கான முடிவு எடுத்துள்ள வேளையில், இந்தியாவுக்கு அதில் நிரந்த இடம் கிடைப்பதற்கு ஒபாமா ஆதரவளிக்க வேண்டும்.அமெரிக்காவில் நடக்க உள்ள இடைத்தேர்தல்கள், “அவுட்சோர்சிங்’ குறித்த பயத்தை மீண்டும் எழுப்பியுள்ளன. அதேநேரம், தற்காலிக எச்.1பி., விசா மற்றும் எல்.1 விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளதும் தொழில் துறையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நிலையில், இந்தியாவை தனக்கு ஆதரவான நாடாக அமெரிக்கா நடத்த வேண்டும். தற்போது அன்னிய நேரடி முதலீடு 26 சதவீதம் தான் உள்ளது. இது 74 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply