சியோல் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மகளுக்கு, தென்கொரியாவை சேர்ந்த ஒருவர் அனுப்பிய பார்சலால், ஜி-20 மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
தென்கொரிய தலைநகர் சியோலில், கடந்த இரண்டு நாட்களாக ஜி-20 நாடுகளின் ஐந்தாவது உச்சி மாநாடு நடந்தது. இதனால் அந்நகர் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. நேற்று மாநாடு நடந்து கொண்டிருந்த போது, சியோல் நகரின் ஒரு போஸ்ட் ஆபீசின் ஊழியர் ஒருவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இளைய மகள் சஷா பெயரில் வந்துள்ள ஒரு பார்சல் குறித்து பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் பரபரப்படைந்த பாதுகாப்பு போலீசார், அதை எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் சோதனையிட்டனர். அதில், பார்சலுக்குள் உருண்டை வடிவத்தில் பல பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உஷாரான போலீசார், பார்சலுக்குள் வெடிகுண்டு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர் மற்றும் மோப்ப நாய் ஆகியோரை வரவழைத்து, பார்சலை பிரித்து சோதனையிட்டனர்.
அப்போது பார்சலுக்குள் பேரிக்காய்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. நிம்மதி பெருமூச்சு விட்ட னர் போலீசார். சியோல் நகரின் ஒரு பகுதியான, புசன் என்ற பகுதியில் வசித்து வரும் 70 வயதான தாத்தா ஒருவர் தான் அதை அனுப்பி வைத்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பார்சல் அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
Leave a Reply