சென்னை: பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, எந்த வேலைவாய்ப்பும் பெறாதவர்களுக்கு, வேலைவாய்ப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாத பதிவுதாரர்களும், தங்களது கல்வித் தகுதியை உயர்த்தவும், வேலைவாய்ப்பு பெறும் திறன்களை வளர்க்கவும் உதவும் வகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம் நீட்டிக்கப்படுகிறது.
இதன்படி, பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் நூறு ரூபாய் உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், முறையாக பள்ளியில் படித்து ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10ம் வகுப்பில் தோல்வியடைந்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது வரையிலும், மற்றவர்களுக்கு 40 வயது வரையிலும் அதிகபட்சமாக உதவித் தொகை வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி அடைந்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.
Leave a Reply