சிங்கப்பூர் : “”இந்தியா ஒரு முட்டாள் நாடு; அது “ஆசியான்’ அமைப்பில் பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் நிற்கிறது,” என, சிங்கப்பூர் உயரதிகாரி ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.
கடந்த 2008 மற்றும் 2009ல், சிங்கப்பூர் உயரதிகாரிகளுடன் அமெரிக்க உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிங்கப்பூர் அதிகாரிகள், “ஆசியான்’ அமைப்பில் உள்ள இந்தியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை பற்றி மட்டரகமான விமர்சனங்களை கூறியுள்ளனர்.”ஆசியான்’ என்பது, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் இந்தியா, புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் உள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பத்திரிகையான “பேர்பாக்ஸ் மீடியா’ வெளியிட்டுள்ளதாவது: சிங்கப்பூர் தூதர் டோமி கோஹ், ஜப்பானை “கொழுப்புவற்றிப் போன நாடு. அந்த பிராந்தியத்தில் தொலைநோக்கு எதுவும் இல்லாமல், முட்டாள்தனமாக, மோசமாக தலைமை வகிக்கும் நாடு’ என்றார். மேலும் அவர், “இந்தியாவும், ஜப்பானை போல ஒரு முட்டாள் நாடு தான். ஆசியான் அமைப்பில் பாதி வெளியேயும், பாதி உள்ளேயும் அந்நாடு இருக்கிறது’ என்றார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் நிரந்தர செயலர் பீட்டர் ஹோ கூறுகையில், “சரியான தலைமை இல்லாதது தான் மலேசியாவின் பிரச்னை. அதனால் அது குழப்பத்தில் இருக்கிறது. இது அபாயகரமானது. அங்குள்ள இனப் பிரச்னையால், அங்கிருந்து சீனர்கள் வெளியேறி, சிங்கப்பூரில் குடியேறி வருகின்றனர். மலேசியப் பிரதமர் நஜீப் ரஜாக் ஒரு சந்தர்ப்பவாதி’ என்றார். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply