இரண்டாவது ஒரு நாள் போட்டி: இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

கவுகாத்தியில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாஸ் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக குப்திலும் ஜேமி ஹாவ் களம் இறங்கினர். 14 ரன்கள் எடுத்திருந்த போது ஜேமி ஹாவ் (5) ஸ்ரீசாந்த் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் களம் வந்த வில்லியம்சன் 29 ரன்களிலும், டைலர் 15 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். ஸ்டைரிஸ் குப்திலும் மட்டும் சிறப்பாக விளையாடினர். முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்க்கு 258 ரன் எடுத்திருந்தது. இந்திய பவுலர்கள் தரப்பில் ஸ்ரீசாந்த் 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் காம்பீர் அபாரமாக விளையாடி தனது 8-வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். அவர் 116 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து அவுட்டாக வில்லை. இதில் 18 பவுண்டரிகள் அடங்கும். வீரட் கோக்லி 64 ரன்களும், விஜய் 33 ரன்களும், யுவராஜ் சிங் 16 ரன்களும் எடுத்தனர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *