உயர்ந்த பதவியில் ஊழல் நபரா? கேள்விக்குறியாகும் அரசின் நம்பகத்தன்மை

posted in: மற்றவை | 0

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரே, ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைவராக எந்த நாட்டிலாவது ஆக முடியுமா? சினிமாவில் மட்டும் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.

ஆனால், நிஜத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. வேறு ஏதாவது ஒரு நாட்டில் நடந்திருக்கும் என, கற்பனை செய்ய வேண்டாம். ஊழலுக்கு பெயர் போன நம் நாட்டில் தான் இந்த அதிசயமான விபரீதம் நடந்துள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன்) தலைவராக உள்ள பி.ஜே.தாமஸ் தான் அந்த நபர். கடந்த 1990களில் கேரள மாநில அரசின் உணவுத் துறை செயலராக பணியாற்றியவர் இவர். அப்போது கேரளாவில் பாமாயிலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது.இதுகுறித்து தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு செய்து, அறிக்கை அளித்தார். அதில், “பாமாயிலின் உண்மையான விலையை விட, மிகவும் அதிகமான விலை நிர்ணயம் செய்யப்பட்டு, மலேசியாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநில அரசுக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டு பதிவு:இது, கேரள அரசியலில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஊழல் வழக்கு பதிவு செய்தனர். அரசுக்கு இழப்பு ஏற்படுத்த காரணமாக இருந்ததாக கூறி, தாமசின் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால், தாமஸ் மீது ஊழல் முத்திரை பதிந்தது.இதற்கு பின், மாநில அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார், தாமஸ். குறிப்பாக, தொலைத்தொடர்பு துறை செயலராகவும் பணியாற்றினார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்:இந்த தாமசை தான், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்துள்ளது, மத்திய அரசு. பிரதமர், உள்துறை அமைச்சர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை கொண்ட கமிட்டி தான், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கான நபரை தேர்வு செய்ய முடியும். இந்த மூவர் குழு சமீபத்தில் கூடி, ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கான நபரை தேர்வு செய்வது குறித்து ஆய்வு செய்தது.அப்போது பிரதமரும், உள்துறை அமைச்சரும் தாமஸ் பெயரை முன்மொழிந்தனர். இதற்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “ஏற்கனவே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை, ஊழல் கண்காணிப்பு ஆணையராக எப்படி தேர்வு செய்ய முடியும்’ என, ஆட்சேபம் தெரிவித்தார்.ஆனால், இந்த எதிர்ப்பை பிரதமர் பொருட்படுத்தவில்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில், தாமஸ் அந்த பதவியில், கடந்த செப்டம்பர் 6ல் அமர்த்தப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட் கண்டனம்:இதையடுத்து, இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் குறித்து ஆச்சர்யம் தெரிவித்தது. “ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர், ஊழல் கண்காணிப்பு ஆணையராக செயல்பட முடியுமா? அவரின் பாரபட்சமான செயல்பாடு குறித்து, யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்களா’ என, கேள்வி எழுப்பியது.மேலும், “உங்களின் நியமனத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது’ என, தாமசுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த குழப்பம்?மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்துக்கு, முந்தைய தே.ஜ., கூட்டணி அரசும் ஒரு காரணம் என, கூறப்படுகிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை, பிரதமர், உள்துறை அமைச்சர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரை கொண்ட குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும், இந்த பதவியில் அமர்த்தப்படும் நபருக்கான அடிப்படை தகுதிகளுக்கு சில விதிமுறை வகுக்கப்பட்டு இருந்தது.”முந்தைய திறமையான செயல்பாடுகள், அவரின் நேர்மை, ஊழலற்ற தன்மை ஆகியவற்றை கொண்ட அதிகாரியை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்யலாம்’ என்பது அந்த விதிமுறை. ஆனால், தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில் விதிமுறையில் இருந்த, “நேர்மை, திறமையான செயல்பாடுகள்’ ஆகிய இரண்டு தகுதிகளும் நீக்கப்பட்டன.பிரதமர் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரை மட்டுமே, இந்த பதவி நியமனத்துக்கு போதுமானதாகவும், கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின்படி நியமனம் செய்யலாம் என்றும், இதில் ஒருமித்த கருத்து தேவையில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட இந்த குளறுபடியே, தற்போது தாமஸ் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது நம்மை பெருமைப்பட செய்யும் விஷயம். ஜனநாயக நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை, ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது, மத்திய அரசின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கி உள்ளது..

இதுகுறித்து இந்திய பொது நிர்வாகத் துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரி சேகர் சிங் கூறியதாவது: மத்திய அரசின் முக்கிய பதவிகளுக்கான நியமனத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்.
இந்த குழுவுக்கு பிரதமர் தலைவராக இருப்பதில் எந்த தவறும் இல்லை. அந்த பதவியில் அவர் தொடரலாம். அதே நேரத்தில் மற்ற இரு உறுப்பினர்களாக, எதிர்க்கட்சி தலைவரும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும் இருக்க வேண்டும். அவர்களின் ஆலோசனைப்படி, முக்கிய பதவிகளுக்கு நியமனம் நடைபெற வேண்டும்.இவ்வாறு சேகர் சிங் கூறுகிறார்.

அரசுத் துறைகளில் ஊழல்கள் மறைமுகமாக நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இனிமேல் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி, வெளிப்படையாக ஊழல்கள் நடக்கலாம் என, மத்திய அரசு சொல்லாமல் சொல்லும் விதமாகவே, ஊழல் கண்காணிப்பு ஆணையரின் பதவி நியமனம் அமைந்துள்ளதோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை களைய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

யார் இந்த தாமஸ்?மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள தாமஸ், 1973ல் ஐ.ஏ.எஸ்.,தேர்வு பெற்றவர். கடந்த 1992ல் கேரளாவில் கருணாகரன் முதல்வராக இருந்த போது, இவர், மாநில உணவுத் துறை செயலராக இருந்தார். அப்போது, மலேசியாவைச் சேர்ந்த பவர் எரிசக்தி நிறுவனத்திடம் இருந்து, 15 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்ய, கேரள அமைச்சரவை முடிவு செய்தது.இதில், கேரள அரசு வாணிப கழகத்தின் வழிகாட்டுதலை மீறி, ரூ.2.08 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், முறைகேடு நடந்ததாகவும், மாநில தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். கடந்த 2003ல் இதுகுறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.கருணாகரன் உட்பட எட்டு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதில் தாமசின் பெயரும் இடம் பெற்றது. குற்றப்பத்திரிகையிலும் தாமசின் பெயரும் இடம் பெற்றது. கடந்த 2003 ஏப்ரலில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாமஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும், ஸ்பெக்ட்ரம் “2ஜி’ ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில், மத்திய தொலைத்தொடர்பு துறை செயலராக பதவி வகித்தவர் தாமஸ் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *