ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ. 5,000 தமிழக அரசு வெள்ள நிவாரணம்?

posted in: அரசியல் | 0

சென்னை : முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மழையால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது, முதன் முதலாக நிவாரண நிதியுதவியாக, ஒரு குடும்பத்திற்கு சுளையாக இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்கி, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

இதை பின் பற்றி, கடந்த 2008ல் கடும் மழையால் மக்கள் பாதித்தபோது, கருணாநிதியும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2,000 ரூபாய் வழங்கினார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால் பொது மக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, நிவாரண நிதி அளிப்பது குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, தலைமைச் செயலகத்தில் இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக நிவாரணம், அதே நேரத்தில் ஓட்டுக்கு ஓட்டு என்று, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக, இன்று முக்கிய முடிவுகளை முதல்வர் எடுக்க உள்ளார். அதன் படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படும், என தெரிகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக, வழங்குவது குறித்தும் முடிவு எடுத்து, இன்று மாலை அறிவிப்பு வெளியாகும், என தெரிகிறது.

வெள்ள சேத விபரங்களை மதிப்பிட தமிழக அரசு, உயர் அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றி, வெள்ள சேதங்களை பார்வையிட்டது. இந்த குழு, இன்று சென்னையில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறது. அந்த அறிக்கையின் படி வெள்ள நிவாரண உதவிகளை வழங்க அமைச்சரவை கூட்டம் இன்று மாலை கூடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *