கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது- இளங்கோவன்

posted in: அரசியல் | 0

ஈரோடு: இந்தியாவில் எங்கும் பரம்பரை ஆட்சி இல்லை. தனக்கு பின் தனது மகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தமிழகத்தில் நடக்காது என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஈரோடு அருகே நம்பியூரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,

தமிழக அரசியலில் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவே வாழ்கின்றனர். இந்தியாவில் எங்கும் பரம்பரை ஆட்சி இல்லை. தனக்கு பின் தனது மகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தமிழகத்தில் நடக்காது.

தவறுகளைத் திருத்திக் கொள்ளச் சொல்கிறோம். திருந்த மறுத்தால் வெளியேறி விடுவோம்.

சோனியாவுக்கு மன்னிக்கும் குணம் உண்டு, ஆனால் ராகுலுக்கு அது இல்லை. சோனியாவைப் போல் ராகுலையும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர் எதற்கும் தயங்க மாட்டார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதாகக் கூறுகின்றனர். அந்த அரிசியில் மத்திய அரசின் மானியம் உள்ளது. அதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்?.

கலர் டி.வி இலவசமாகத் தான் தரப்படுகிறது. ஆனால், அதை வாங்குவோர் நிகழ்ச்சிகளைப் பார்க்க செலுத்தும் கேபிள் கட்டணத்துக்கான பணம் யாருக்குப் போகிறது?

சர்க்காரியா கமிஷனே இவர்கள் (முதல்வர் கருணாநிதியை) விஞ்ஞான முறையில் ஊழல் புரிபவர்கள் என்று சான்றிதழே கொடுத்துள்ளது.

சிலர் கூறி வருவதுபோல சாமானியனாகப் பிறந்திருக்கலாம், சாமானியனாக கொஞ்ச காலம் வளர்ந்திருக்கலாம், ஆனால் சாமானியனாக இறக்கப் போவதில்லை. சாமானியனாக இறந்தது காமராஜர் மட்டும்தான். அவர் இறக்கும்போது அவரது சட்டைப் பையில் 100 ரூபாய் தான் இருந்தது.

தேர்தலின்போது ஓட்டுக்காகப் பணம் தருவார்கள். அது உங்கள் பணம்தான், அதற்கு வட்டியும் சேர்த்து கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு காமராஜர் ஆட்சி அமையும் வகையில் வாக்களியுங்கள் என்றார் இளங்கோவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *