காங்., எதிர்க்கட்சிகள் பலப்பரீட்சை ஆரம்பம்: முன்கூட்டியே லோக்சபா தேர்தல் வருமா?

posted in: அரசியல் | 0

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில் நடந்த ஊழல் விவகாரத்தில், காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் போராட்டம், பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரிலும் தொடர்ந்தால், லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வரக் கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

“ஸ்பெக்ட்ரம் “2ஜி’ ஒதுக்கீடு, ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு, காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில் நடந்த ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும்’ என, பா.ஜ., – இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசு இதை ஏற்க மறுத்து வருகிறது.இதனால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கிப் போய்விட்டது. கூட்டத் தொடரில், இன்று ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக, இன்றும் பார்லிமென்ட் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பி வருவதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊழல் விவகாரங்களை விசாரிக்க, பார்லிமென்ட் பொது கணக்குக் குழு, ஒரு நபர் கமிஷன் என, பல ஆலோசனைகளை மத்திய அரசு தெரிவித்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை தான் தேவை என்பதில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *