சென்னை : “அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் பிறப்பித்த சுற்றறிக்கைகள் செல்லும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க, உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு 1992ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவின் பரிந்துரைப்படி, தொடக்கப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து, பள்ளி கல்வித் துறை 1997ம் ஆண்டு உத்தரவிட்டது. உயர்மட்டக் குழு அமைத்த பின், அனைத்து தலைமை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித் துறை சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், “ஆசிரியர்கள் – மாணவர்கள் விகிதம் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்கும் வரை இறப்பு, ராஜினாமாவால் ஏற்படும் காலியிடங்களில் யாரையும் நியமிக்க வேண்டாம் என பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை 1994ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அரசு உதவி பெறும் பள்ளிகள் வழக்கு தொடுத்தன. மனுக்களை விசாரித்த ஐகோர்ட், “காலியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்ததன் மூலம், மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த சுற்றறிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன’ என உத்தரவிட்டது. 1999ம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை இருந்த போது, ஐகோர்ட் உத்தரவு மூலம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர் நியமனங்கள் நடந்தன. இவ்வாறு 1,109 நியமனங்கள் நடந்துள்ளன. இந்த ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்குவதற்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சுற்றறிக்கைகளை ரத்து செய்த ஐகோர்ட், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, கல்வித் துறைச் செயலர், பள்ளி கல்வி இயக்குனர், அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்களை நீதிபதிகள் பானுமதி, ராஜேந்திரன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், சிறப்பு அரசு பிளீடர் சங்கரன் ஆஜராகினர்.
“டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: அரசு பிறப்பித்த சுற்றறிக்கைகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதிக்கவோ, மீறவோ இல்லை. இதை பிறப்பிக்க அதிகாரிகளுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது. சுற்றறிக்கையைத் தொடர்ந்து அரசாணை பிறப்பித்ததன் மூலம், தடைக் காலத்தில் செய்யப்பட்ட நியமனங்கள் எல்லாம் வரன்முறை செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அனுமானங்கள் நீக்கப்படுகின்றன. கல்வியில் உயர் தரத்தை பேணவும், தரத்தை உயர்த்தவும், அரசுக்கு அதிகாரம் உள்ளது. சட்டப்பூர்வ உரிமையும் உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற, 1994ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உயர்மட்டக் குழுவிடம் இருந்து அறிக்கை பெறும் வரைக்கும் இந்த உத்தரவு என கூறப்பட்டுள்ளது. சுற்றறிக்கையை பிறப்பிக்க அரசுக்கு உரிமையில்லை என, பள்ளிகள் தரப்பில் வைக்கப்படும் வாதத்தில் அழுத்தம் இல்லை. தடைக் காலத்தில் பணியில் நியமிக்கப்பட்ட எவரும், தன்னை இதுவரை பணி வரன்முறை செய்யவில்லை என அரசுக்கு புகார் கூறவில்லை. சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு உகந்ததல்ல என “டிவிஷன் பெஞ்ச்’ ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, 1994ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி கல்வித் துறை பிறப்பித்த சுற்றறிக்கைகள், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல. அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு தான் இவை பிறப்பிக்கப்பட்டுள்ளன. அரசின் அப்பீல் மனுக்கள் ஏற்கப்படுகின்றன. இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply