மொபைல் மார்க்கெட்- சாம்சங்கை பின்னுக்குத் தள்ளிய ஜி பைவ்

மும்பை: மொபைல் போன்களில் சீனத் தயாரிப்புகள் என்றால் மட்டமாகப் பார்க்கும் மனோபாவம் அடியோடு மாறியிருக்கிறது.

அதன் விளைவு, இந்திய மொபைல் மார்க்கெட்டில் அசைக்க முடியாத பிராண்டுகளாகத் திகழ்ந்த நோக்கியா, சாம்சங் இரண்டுமே ஆட்டங்கண்டு போயுள்ளன. சமீபத்திய சந்தை கணக்கெடுப்புகளின்படி இந்திய மொபைல் சந்தையில் இரண்டாம் இடம் வகிப்பது ஒரு சீனத் தயாரிப்பு மொபைல்தான். அது ஜி பைவ்.

இந்த அந்தஸ்தில் இதுவரை கோலோச்சி வந்தது கொரிய நிறுவனமான சாம்சங். இப்போது சாம்சங்கை பின்னுக்குத் தள்ளிவிட்டது ஜி பைவ்.

2010- காலண்டர் ஆண்டில் மொபைல் போன் கருவிகள் விற்பனை விவரங்களின் அடிப்படையில், இந்திய சந்தையில் நோக்கியா முதலிடத்தில் உள்ளது. அதன் மார்க்கெட் அளவு 31.5 சதவீதம். ஆனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 5 சதவீதம் குறைவாகும். இந்த 5 சதவீதத்தைக் கைப்பற்றி இருப்பது ஜிபைவ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த சாம்சங் 8 சதவீதத்துடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. இப்போதைய நிலவரப்படி 10.6 சதவீத மார்க்கெட் ஷேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது ஜி பைவ்.

மிகக் குறைந்த விலையில் ப்ளாக்பெரி மாடலில் உள்ள அத்தனை வசதிகளோடும் ஜிபைவ் மொபைல்கள் கிடைப்பதால், மக்கள் நோக்கியா, சாம்சங் போன்ற மொபைல்களை விட்டு, ஜி பைவுக்குத் தாவி விடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜிபைவ் மாடலில் அதிகபட்ச விலையே ரூ 3000 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *