புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை தர, மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள பணம் திருடப்பட்ட நமது தேசத்தின் சொத்து. நாட்டை கொள்ளையடித்து குவிக்கப்பட்டது என்றும் காட்டமாக கூறியுள்ளது.
சுவிட்சர்லாந்து உட்பட பல அன்னிய நாட்டு வங்கிகளில், இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்றும், அந்தப் பணத்தை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி உட்பட பலர் மனு செய்தனர். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, அன்னிய நாடுகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டு வர இரட்டை வரி தவிர்ப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி விவரித்தார்.
இதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: ஜெர்மனியின் லீச்டென்ஸ்டீன் வங்கியில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள 26 பேர் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அவை முழுமையான தகவல்களாக இல்லை. அதில், குறைவான விவரங்களே இடம் பெற்றுள்ளன. இந்த தகவல்கள் மட்டும் தான் அரசிடம் உள்ளதா அல்லது இதை விட அதிகமான விவரங்கள் உள்ளதா? அரசு தந்துள்ள விவரங்கள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. அதிருப்தி தருகிறது. ஏராளமான அளவில் வெளிநாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அது நாட்டை கொள்ளை அடித்து குவிக்கப்பட்ட பணம். தேசத்தின் பணம் திருடப்பட்டு டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ஒப்பந்தங்களில் உள்ள நுட்பங்கள் பற்றி நாங்கள் பேசவில்லை. நினைத்தாலே திடுக்கிட வைக்கும் குற்றத்தை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.
கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளவர்கள் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், இயக்குனர் மட்டத்தில் உள்ள அதிகாரியே கையெழுத்திட்டுள்ளார். அந்த ஆவணத்தில் நிதித்துறை செயலர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதிலிருந்தே இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்பது தெளிவாகிறது. ஜெர்மனியின் லீச்டென்ஸ்டீன் வங்கியில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்கள் தொடர்பானது மட்டுமல்ல இந்த மனு. இதர வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்துள்ளவர்கள் பற்றியும் கேட்கப்பட்டுள்ளது. பொதுநலன் தொடர்பான இந்த ரிட் மனு மீதான விசாரணை வரம்பை அதிகரிப்பதில், எங்களுக்கு ஒன்றும் தடையில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பணம் தொடர்பான முழு விவரங்களும் தரப்பட வேண்டும் என, நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
இதன்பின் நீதிபதிகளை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், “அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளது என்பது திடுக்கிட வைக்கும் குற்றமே. இருந்தாலும், அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. தற்போது தகவல் வெளியான வங்கி தொடர்பான நாடு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுடன் இரட்டை வரி ஒப்பந்தங்கள் தொடர்வதால் அந்த அடிப்படையில் பெயர்களை வெளியிட முடியாது. குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே விவரங்களை தெரிவிக்க முடியும். தவிரவும் அரசு நிர்வாக நடைமுறைப்படி குறிப்பிட்ட அதிகாரி கையெழுத்திட்டிருக்கிறார்’ என்றார்.
Leave a Reply