கல்விக்கான ஒதுக்கீடு 10 ஆயிரம் கோடி: ஆசிரியர் சம்பளமோ 9 ஆயிரம் கோடி

posted in: கல்வி | 0

தேனி : “”பள்ளிக் கல்வித்துறைக்கான 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில், ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டும் 9,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது,” என, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

தேனி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி சீரமைப்பு மாநாடு தேனியில் நடந்தது. கலெக்டர் முத்துவீரன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் அறிக்கை வாசித்தார். கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடந்த ஆட்சியில் கல்வித்துறைக்கு 2,000 கோடி, 3,000 கோடி என்றுதான் நிதி ஒதுக்கினார்கள். கடந்த பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு வருவாயில் இது ஐந்தில் ஒரு பகுதி. கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் 10 ஆயிரம் கோடியில் 9,000 கோடி ரூபாய், ஆசிரியர்களாகிய உங்கள் சம்பளத்துக்கே செலவிடப்படுகிறது.

கடும் நிதிச்சுமையையும் தாங்கிக்கொண்டு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க 250 கோடி ரூபாய் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். மாநாட்டின் மூலம் அசையும் சொத்துக்களாக பள்ளிகளுக்கு 10.72 கோடி ரூபாயும், அசையா சொத்துக்களாக 22.73 கோடியும் கிடைத்துள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும், சலுகைகளையும் செய்யும் இந்த ஆட்சிக்கு உங்கள் பிரதிபலனை திருப்பித் தரும் காலம் விரைவில் வர உள்ளது. நான் தேர்தலை சொல்லவில்லை. விரைவில் வர உள்ள பொதுத் தேர்வுகளை சொல்கிறேன். மாணவர்களை அதிகளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *